ஆட்டோமொபைல்
வெளியீட்டிற்கு முன் இத்தனை முன்பதிவுகளா? அமோக வரவேற்பு பெறும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியாகாத நிலையில், இதனை வாங்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை ஜூன் 25 ஆம் தேதி துவங்கியது. அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு துவங்கியது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெவோல்ட் ஆர்.வி. 400 ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம். எனினும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்பதால் ஜி.எஸ்.டி. சலுகைகளின் மூலம் இதன் விலை குறையலாம் என கூறப்படுகிறது.
ரெவோல்ட் ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜூன் 18 ஆம் தேதி காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு உயர் ரக அம்சங்கள் நிறைந்த புதிய மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் வாகன அம்சங்களை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த செயலியை கொண்டு மோட்டார்சைக்கிளின் பேட்டரி அளவுகளை பார்க்க முடியும். புதிய ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வரை செல்லும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சாவி செருகும் அமைப்பிற்கு மாற்றாக பவர் ஆன் / ஆஃப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கீலெஸ் பவர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் ஜியோ-ஃபென்சிங், பைக் லொகேஷன், மேப்ஸ், நேவிகேஷன், ரியல்-டைம் பைக் விவரங்களான ரேன்ஜ் மற்றும் ஸ்பீடு உள்ளிட்டவற்றை காட்ட டிஸ்ப்ளே பயன்படுகிறது.