கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 05:53 GMT   |   Update On 2024-04-16 05:59 GMT

கன்னி-பாக்கிய குரு 60%

அழகும் திறமையும் நிறைந்த கன்னி ராசியினரே!

கன்னி ராசிக்கு மே1, 2024 முதல் குருபகவான் பாக்கிய ஸ்தானம் செல்கிறார். ராசியில் கேதுவும், 7ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனிபகவான் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

பாக்கிய குருவின் பொதுபலன்கள்

கடத்த ஓராண்டு காலமாக அஷ்டம குருவால் அனுபவித்த இன்னல்கள் விடுபடும் நேரம் வந்துவிட்டது. 4, 7ம் அதிபதியான குரு பகவான் கடந்த ஓரு வருடமாக அஷ்டம ஸ்தானத்தில் நின்று வழங்கிய கெடு பலன்கள் குறையும் நேரம் வந்துவிட்டது. இனி இன்பங்களை அனுபவிக்கும் நேரம் துவங்கிவிட்டது. 9ம்மிடம் என்பது பாக்கியஸ்தானம். இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கியங்கள் பற்றிக் கூறுமிடம். பாக்கிய ஸ்தான குரு மூலம் உயர்வான பலன்களை அடையப்போகிறீர்கள்.

தொட்டதெல்லாம் பொன்னாகும். தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும் அரவணைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள், புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது , புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, உயர் ரக சொகுசு வாகனம் போன்ற அனைத்து இன்பங்களையும் நுகரப் போகிறீர்கள்.

உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பீர்கள். அதிர்ஷ்டத்தாலும், யோகத்தாலும் முன்னேற்றம் அடைவீர்கள். சுயமுயற்சி உள்ளவராக இருப்பீர்கள். வெளிநாட்டு பணி. தொழிலில் நிலவிய தடைகள் விலகும். உயர்கல்வியில் நிலவிய தடைகள் விலகும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் 5ம் பார்வை ராசியில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. குரு, கேது சேர்க்கை கோடீஸ்வர யோகம். இயற்கையிலேயே அழகான உங்களை குரு பார்ப்பதால் மேலும் அழகு பெறுவீர்கள். உடல் தேஜஸ் பெறும். தங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகிழ்ச்சி தரும். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும்.

வாழ்வில் வசந்தம் உலா வரும். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும்.

குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்துடன் இணைவார். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது. தங்களின் தோற்றம், செயல்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடைப்பட்ட செயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும். உங்களுடைய தகுதி, திறமை உயரும். சமுதாய அங்கீகாரம் கிடைக்கும்.

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும். சிலருக்கு உயில் எழுதி வைக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். உங்களின் முயற்சிக்கு உடன் பிறந்த சகோதர , சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள்.

வரவு செலவு சீராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் அன்பு மிளிரும். திருமணம் நடக்கும். குழந்தை பிறக்கும். உடல் நிலை சீராகும். தொழிலை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிடுவீர்கள். உங்களின் முயற்சிகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் 9ம் பார்வை பதிகிறது. 5ம்மிடம் பூர்வீகம் அதிர்ஷ்டம். குழந்தைகள், அதிர்ஷ்டம். ஆழ்மன சிந்தனை, காதல் ஆகியவைகள் பற்றிக் கூறுமிடம். குழந்தை பாக்கியம் ஏற்படும். புத்திக் கூர்மை அதிகமாகும். நாத்திகம் பேசியவர்கள் எல்லாம் ஆன்மீகம் பேசுவார்கள். குருமார்களின் மந்திர உபதேசம் கிடைக்க பெறுவீர்கள். தெய்வ அனுக்கிரகம், குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். இது வரை குல தெய்வம் தெரியாமல் இருந்தவர்களுக்கு குல தெய்வம் பற்றி தெரியும் காலம் வந்து விட்டது.

பணப்பற்றாக்குறை, புத்திரர் கவலை, பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழந்தை களின் மந்த தன்மை நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்களை ஒத்திப்போடுவது நல்லது. மறுமணம் நடைபெறும்... ஆன்மீக நாட்டம், கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், கல்வி நிறுவனம் நடத்துதல், தான தர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் தானாகவே தேடி வரும். அத்துடன் குல கெளரவம் சமுதாய அந்தஸ்து அதிகமாகும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

கன்னி ராசிக்கு விரயாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தனிமை, அமைதியை மனம் விரும்பும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை அதிகமாகும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். பல வருடமாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுதியாகும். விலையுயர்ந்த பொருட்களை வங்கி பாதுகாப்பில் வைப்பது நல்லது.

சொத்துகள் வாங்கும் பொழுது, விற்கும் போதும் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனையை ஒத்தி வைக்கவும். கண்களுக்கு அறுவை சிகிச்சை, வைத்தியம் செய்ய நேரலாம்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

கன்னி ராசிக்கு லாபாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் பயணிக்கும் காலத்தில் சிறிய முயற்சியில் பெரிய வருமானம் கிடைக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும்.

சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். எதிர்ப்பார்த்த இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15.5.2025 வரை)

கன்னி ராசிக்கு 3, 8ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். தாங்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.எதிர்பாராத மருத்துவ செலவு விரயம் ஏற்படும்.

நீண்ட தூர பயணம் செய்ய நேரும். தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்துப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அரசுவழி ஆதாயம் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

குருவின் வக்ர காலம் (3, 8ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் அதிகப்படியான பணிச்சுமையால் தூக்கமின்மை, சோர்வு . ஞாபகமறதி உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மன உளைச்சல் குறையும். பேச்சில் நிதானம் தேவை. லாப அதிபதியாகிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ரமடையும் போது வருமானம் குறையும். கொடுத்த பணம் வசூலாகாது. தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும். மறைமுக எதிர்ப்புகளை உங்கள் திறமையால் சமாளிக்க வேண்டிய நேரம்.

மாணவர்கள்

பாக்கிய ஸ்தான குருபகவானால் படிக்கும் ஆற்றல் கூடும். இருப்பதால் 10 வது 12 ம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து கன்னி ராசி மாணவ-மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஒரு வருடமாக இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். ஏதேனும் காரணத்தால் பள்ளிப்படிப்பில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடரும் வாய்ப்பு ஏற்படும். இதுவரை சுமாராக படித்த மாணவ-மாணவிகள் கூட கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.தாயின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். தாய்வழி உறவினர்களின் அணுசரனை இருக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு குருப்பெயர்ச்சி, நன்மைகளும், சாதக பலன்களும் நிறைந்த ஆண்டாக அமையும். விரும்பியதை அடையும் சுபிட்சமான காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி அமைய உள்ளது. கணவரின் அன்பளிப்பான அசையாச் சொத்து மகிழ்சியை இரட்டிப்பாக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு மகிழ்வீர்கள். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். மனக்கவலையின்றி படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.அந்தரங்க விசயத்தை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிரக் கூடாது.

 பரிகாரம்

பாக்கிய குருவால் அனைத்து சுபங்களும் அதிகரித்து ஜென்ம கேது மற்றும் 7ம் மிட ராகுவின் தாக்கம் குறைய சனிக்கிழமை நவகிரகங்களை வழிபட வேண்டும்.

Similar News