ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 04:17 GMT   |   Update On 2024-01-11 04:20 GMT

எதிர்காலத்தைப் பற்றியே எப்பொழுதும் சிந்திக்கும் ரிஷப ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பர். தொழில், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும், வருமான அதிகரிப்பும் உண்டு. பத்தில் சஞ்சரிக்கும் சனியின் ஆதிக்கத்தால் முத்தான தொழில்கள் வாய்க்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் மாதத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். லாபாதிபதி குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் லாபம் ஒருபுறம் வந்து கொண்டே இருக்கும். மற்றொரு புறம் விரயமும் அதிகரிக்கும். இருந்தாலும் பணப் பற்றாக்குறை ஏற்படாது. தேவைக்கேற்ப பணம் தேடிவந்து சேரும். விரயங்கள் வீண் விரயங்களாக மாறாமல் இருக்க நீங்களாகவே சுபவிரயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவது, திருமண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வாங்கலாம்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் இருப்பவர் சுக்ரன். அவர் அஷ்டம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றது. தொழிலில் அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து ஆச்சரியப்பட வைக்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்றுப் பெரும் தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். தனாதிபதியான புதன் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதார நிலை திருப்தி தரும். பாக்கிகள் வசூலாகும். பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை, மாலை சூடும் வாய்ப்பு அமையாதவர்களுக்கு மாலையும் கிடைக்கும் நேரமிது. படித்து முடித்த பிள்ளை களுக்கு ெவளிநாடு சென்று படிக்க முயற்சி செய்திருந்தால் அது கைகூடும்.

மகர செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். மகரம் அவருக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உச்சம் பெறும் இந்த நேரம் கூடுதல் விரயங்கள் ஏற்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். இடமாற்றங்கள் இனிமை தரும். `கட்டிய வீட்டை வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அதற்கான முயற்சி கை கூடும்.

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். பொதுவாழ்வில் இருப்பவர் களுக்கு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்று செயல்படுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். பெண்கள், கணவரின் அன்பிற்குப் பாத்திரமாவீர்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 17, 18, 23, 24, 28, 29, பிப்ரவரி: 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:-

பிரவுன்.

Similar News