தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:26 GMT   |   Update On 2023-04-18 05:18 GMT

பேராற்றல் நிறைந்த தனுசு ராசியினரே இதுவரை ராசிக்கு நான்கில் நின்று கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுத்திய குருபகவான் பஞ்சம ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

ஐந்தாமிட குருவின் பொது பலன்கள்:

ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம்.தனுசு ராசிக்கு ராசி மற்றும் நான்காம் அதிபதியாகிய குரு பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று தன, முயற்சி ஸ்தான அதிபதி சனியின் பார்வை பெறுவது சிறப்பான அமைப்பு. இது இழந்ததை மீண்டும் மீட்டுத்தரக் கூடிய கிரக அமைப்பு. இதுவரை நிலவி வந்த தடைகள், தடங்கல்கள் நீங்கி நல்லதொரு முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிறந்த குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் நடந்து கொண்டே இருக்கும். பரிசுகள், பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு பெருகும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். பய உணர்வு நீங்கி வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்றவர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குல தெய்வ அனுகிரகம் ஏற்படும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

தனுசு ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் மனதில் நிலவிய பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பலகாலமாக முடிக்க முடியாமல் தீர்க்க முடியாமல் கிடந்த குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல விடை கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மனதில் உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்து நல்ல சிந்தனை உண்டாகும்.கோவில் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆலயத் திருப்பணிக்கு உதவி செய்வீர்கள். ஆன்மீகப் பெரியோர்கள், மகான்கள், குருமார்கள், இவர்களை தரிசிக்க கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சிலருக்கு குருவின் உபதேசங்கள், தீட்சைகள் கிடைக்கும். நல்ல ஜோதிடர், நல்ல மருத்துவர், நல்ல குருமார்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை மகன் அன்பு பெருகும். பல கோயில் குளம் ஏறி இறங்கிய பலனால் புத்திர பேறு கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் பாக்கியம் உண்டாகும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் தொழிலில் நிலவிய தடைகள் விலகி புத்துயிர் பெறும். வியாபாரம், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். பணிச் சுமை குறையும்.பொருளதார முன்னேற்றம் ஏற்படும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பொன், பொருள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். அடகு நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்பீர்கள். வீடு, மனை, நிலங்கள், .அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்குவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் சுப பலன்கள் உண்டாகும். மூத்த உடன் பிறப்புகள் சித்தப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சொகுசு வாழ்க்கையை நோக்கி முன்னேறுவார்கள்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசியில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் மனதில் தெளிவு, தன்னம்பிக்கை பிறக்கும். உடல் தேஜஸ் பெறும். பல புதிய மாற்றங்கள் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.மனதில் இருந்த கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலம். பட்ட கஷ்டத்திற்கு பயனடையும் காலம் என்று சொல்லலாம். பரந்த மனப்பான்மை தாராள குணம் ஏற்படும்.தந்தை, தந்தை வழி முன்னோர்களின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். சிலர் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். நீங்கள் பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் நிவர்த்தியாக தற்போது பலனடையப் போகிறீர்கள்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்

22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் சொல் கேட்பார்கள். புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சொகுசு பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

தனுசு ராசிக்கு 6, 11ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. IAS, IPS, IFS பணிக்கு தேர்வு எழுதுபவர்களுக்கு பணி நியமனம் உண்டு. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். பிள்ளைகளின் சுப காரியத்திற்கு எதிர்பார்த்த தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களாலும், சமூதாய அந்த ஸ்தான மனிதர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

தனுசு ராசிக்கு பாக்கியாதிபதியான சூரியனின்கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவுரவம் அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் பாடத்தை எளிதி முடிப்பீர்கள். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். மதப்பற்று மிகும். பல தலைமுறையாக விற்காத பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். 4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் வயதானவர்களுக்கு வெளிநாட்டி லிருக்கும் பேரன் பேத்திகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள்: பெண்களுக்கு இது சூப்பரான குருப்பெயர்ச்சி. நேரம் காலம் நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தவேண்டும். உபரி வருமானத்தை சேமித்து நகை,வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி சொத்து கிடைக்கலாம்.உடல் பெருக்கம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களின் தகுதிக்கு தகுந்த உயர்வு உண்டு.

மாணவர்கள்: அக்டோபர் 30,2023ல் ராகு 4ம்மிடம் செல்வதால் குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ / மாணவிகள் மனனம் செய்யாமல் நன்றாக புரிந்து படித்தால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். கணிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்யும் மாணவிகள் முதல் மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.நல்ல பண வரவு சுப விரயம் ஆகிய நன்மைகள் மிகும்.

ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30,2023ல் ராகு நான்காம் இடத்திற்கும் கேது பத்தாமிடமும் செல்கிறார். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது பழமொழி. பத்தாமிட கேது தொழில், உத்தியோகத்தில் தனித்திறமையுடன் மிளிரச் செய்வார். உங்களுடைய தொழில் சார்ந்த உப தொழில் ஒன்று துவங்கும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்: விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும். நல்லது நினைக்க நல்லதே நடக்கும். வியாழக்கிழமை சித்தர்களின் ஜீவ சமாதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட அருமையான சுப பலன்கள் உண்டாகும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மஞ்சள், சந்தனம் அபிசேகம் செய்து மஞ்சள் லட்டு படைத்து குரு பகவானை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News