மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 04:43 GMT   |   Update On 2024-01-11 04:45 GMT

எண்ணம் நல்லதாகும் எல்லாம் நல்லதாகும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும். விரய ஸ்தானத்தில் சனி இருப்பதால் விரயங்கள் வரத்தான் செய்யும். என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. மொத்தத்தில் வரவும், செலவும் சமமாகும்.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, வாக்கு, தனம், குடும்பம், ஆகியவற்றை குறிக்கும் இரண்டாமிடத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. ராசிநாதன் பலம் பெறும் இந்த நேரத்தில் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. தொழில் புரிபவர் களுக்கு பழைய தொழிலை பைசல் செய்து விட்டு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 10-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். தொழிலில் பங்குதாரர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. பணிப்புரியும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்க்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வியாபாரம் வெற்றி நடைபோடும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று உங்கள் பணத்தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.

மகர-செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளுக்கு உங்களை தேர்ந்தெடுப்பர். கிளைத்தொழில் தொடங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு `கூட்டாளிகளை மாற்றலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ, மாணவியர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு வீடு மாற்றங்களும், பணி இட மாற்றங்களும் வரலாம். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 19, 20, 24, 25, பிப்ரவரி: 3, 4, 5, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News