மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2023-11-15 03:51 GMT   |   Update On 2023-11-15 03:53 GMT

எதையும் சிந்தித்து முடிவெடுத்து சிறப்புகளைக் காணும் மீன ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகளும், அதிக விரயங்களும் ஏற்படலாம். ஜென்மத்தில் ராகு சஞ்சரிப்பதால் எண்ணங்களில் திடீர் திடீரென மாற்றங்களும், எதையும் அரைகுறையாகச் செய்து அவதிப்படும் சூழ்நிலையும் உண்டு. சர்ப்ப கிரக ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் குரு, ராகு, கேதுக்களுக்குரிய ப்ரீதிகளை முறையாக அனுகூல நாட்களில் செய்வது நல்லது.

வக்ர குருவின் ஆதிக்கம்

மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசி நாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதி பதியாகவும் விளங்கு பவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறும்பொழுது நன்மை கிடைக்கும். என்றாலும், ராசிநாதனாகவும் விளங்குவதால் சில காரியங்களில் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத விரயங்களும், தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும்.

குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் புதியவர்களை நம்பிச் செயல்பட வேண்டாம். தொழிலில் இணைந்திருந்த பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் இல்லாத இட மாற்றங்கள் வரலாம். வியாழன் தோறும் குரு வழிபாடு அவசியம் தேவை. உடல் நலத்திலும் கவனம் தேவை.

துலாம்-சுக்ரன்

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். அஷ்டமாதிபதி நீச்சம் பெறும்பொழுது நன்மைகளையே எதிர்பார்க்கலாம். எனவே மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கும். கார்த்திகை 14-ம் தேதி தன் சொந்த வீடான துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அஷ்டமம் வலுப்பதால் விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள் உருவாகும்.

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிக்கலாம். மேலும் நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படலாம். கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது என்ற கவலை உண்டு. சுக்ர ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

தனுசு-புதன்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் கார்த்திகை 14-ம் தேதியாகும். எனவே அதன் பிறகு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் கூடுதல் முதலீடு செய்ய கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களும் ஒத்துழைப்பு செய்வர். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் வருமானம் கிடைக்கும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு தருவர். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துவர்.

Similar News