மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 06:25 GMT   |   Update On 2024-04-16 06:29 GMT

மீனம்-சகாய குரு 70%

குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே!

இதுவரை தன ஸ்தானத்தில் நின்று பல்வேறு பொருளாதார மாற்றங்களை வழங்கிய குரு பகவான் தொடர்ந்து 3ம்மிடமான சகாய , முயற்சி ஸ்தானத்திற்குச் சென்று சுப பல்வேறு பலன்களை ஏற்படுத்தவுள்ளார். சனி பகவான் விரய ஸ்தானத்திலும் ராசியில் ராகுவும் ஏழாமிடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.

சகாய குருவின் பொதுபலன்கள்

மீன ராசிக்கு குருபகவான் 1, 10ம் அதிபதி ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் மூன்றாமிடம் செல்கிறார். மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம். தைரியம், தன் நம்பிக்கை, சகோதர ஸ்தானம். 3ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானம். லக்ன பாவத்தின் பாவத் பாவமான 3ம்மிடம் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் பாவகமாகும். வெற்றிக்கு வலு கூட்டுவது மற்றும் வெற்றி மேல் வெற்றியைத்தருவது.

இந்த இடத்திற்கு ஒருவரின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றும் குருபகவான் செல்வதால் அனைத்து இன்பங்களும் அதிகமாகும்.

தைரியம், தன் நம்பிக்கை முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தடைக் கற்கள் படிக்கற்களாகும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என உங்களின் நல்வாழ்விற்கான தேவையான அனைத்து மாற்றங்களும் நடக்கும். சகோதரத்தால் ஆதாயம் உண்டு.

உங்கள் இன,மத அமைப்புகளில் முதன்மைப் பதவியும் கெளரவமும் கிடைக்கும். உயில் எழுத அல்லது எழுதப்பட்ட உயிலைப் பெற, டாக்குமெண்டுகளை திருத்த, புதிய பத்திரம் எழுத உகந்த நேரம். காணாமல் போன பொருள், கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். ஞாபக சக்தி. சிந்திக்கும் திறன் கூடும். 3ம்மிடம் ஒப்பந்தம் பற்றிக் கூறுமிடம் என்பதால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு 7ம்மிடத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. ஏழாமிடம் என்பது திருமண வாழ்க்கை,தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் பற்றிக் கூறுமிடம். தன் பார்வை பலத்தால் ஒரு பாவகத்தின் பலனை விருத்தி அடையச் செய்யும் சக்தி படைத்தவர் குருபகவான். கேது பகவான் தான் நின்ற பாவக பலனை சுருக்கும் தன்மை கொண்டவர். அதே நேரத்தில் அவர் வலை கிரகம். தூண்டில் என்றும் கூறலாம்.

குரு பகவான் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் இதுவரை திருமணம் பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் உருவாகும்.சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். உபத்திரத்தைக் கொடுத்து வந்த பழைய தொழில் கூட்டாளியின் விலகல் நிம்மதி தரும்.புதிய திறமையான பங்குதாரரின் வருகை மகிழ்ச்சியைத் தரும். பெரிய மனிதர்களின் நட்பும் உதவியும் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் வெற்றிப் பாதையைக் காட்டும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7ம் பார்வை ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. அந்த இடத்திற்கு சனி பார்வையும் உள்ளது. மத்திம வயதினர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி பாக்கிய பலத்தால் தாத்தா, பாட்டி ஆவார்கள். திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு முன்னோர்கள் மற்றும் குல தெய்வ அருளால் குலம் தழைக்க ஆண் வாரிசு பிறக்கும். வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தை,மகன் உறவு மேலோங்கும்.அறியாமையால் குடும்ப பெரியவர்களிடம் சாபம் வாங்கியவர்கள் குருவின் பார்வை ஒன்பதாமிடத்திற்கு இருக்கும் இந்த காலத்தில் இயன்ற ஆடை தானம் தந்து ஆசி பெற பாக்கிய பலம் கூடும்.

வீட்டுப் பெரியவர்கள் உயிரோடு இருக்கும் போது முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி விட்டு இறந்த பிறகு அவர்களை வழிபடுவதால் எந்த பயனும் கிடையாது.வாழும் காலத்தில் ஒருவரின் ஆசியைப் பெறுபவர்களின் ஏழு தலைமுறையினர் எந்த குறையுமின்றி வாழ முடியும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் ஒன்பதாம் பார்வை பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் எண்ணங்களை ஆசைகளை நிறைவேற்றுமிடம் பதினொன்றாமிடம். பூர்வீக சொத்து தொடர்பான பாகப் பிரிவினை நடந்து உங்கள் பங்கு முழுமையாக கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தகவல், தொடர்பு ஊடகங்களில் உங்களின் பெயர் பிரபலமாக பேசப்படும்.

தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும்.ஏதாவது வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும். கடன் சுமை குறையும். எதிர் கால வாழ்க்கையை நினைத்து பயந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.வராக் கடன்கள் வசூலாகும்.

அடமானத்தில் இருக்கும் நகைகள் மீண்டு வரும். மறுதிருமண முயற்சி வெற்றி தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது குடும்பம் அமைக்கலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே உங்களை வழி நடத்தும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

மீன ராசிக்கு 6ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சுய ஜாதகத்தில் 6ம்மிடம் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை நடப்பவர்களுக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு தேவையில்லாத கடன் மற்றும் வம்பு, வழக்கில் மாட்டலாம். சம்பந்த மில்லாத புதிய எதிரிகள் தோன்றுவார்கள். ஜனன கால ஜாதகத்தில் சுப வலிமை பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும். வராக்கடன் வசூலாகும்.

கடன் பாதிப்பு குறையும். வீண் வம்பு, வழக்கிலிருந்து விடுபடுவார்கள். எதிரிகள் நட்பு கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

மீன ராசிக்கு 5ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அனைத்து எண்ணங்களும் பலிதமாகும். சிந்தனை, செயல்திறன் அதிகரிக்கும். எடுக்கும் தீர்மானங்கள் சரியாக இருக்கும். பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.குழந்தை பாக்கியமும், குழந்தைகளால் மன நிம்மதியும் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம், பங்குச் சந்தை ஆதாயம் தருவார். குல தெய்வ அனுகிரகம் உண்டு. புகழ், அந்தஸ்து, கெளவரம் தரும் பதவிகளைப் பெற்றுத் தருவார். சாஸ்திர ஞானம் மிகுதியாகும் வேற்று மொழி நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய எதிர் பாலின நட்பு, காதல் ஏற்படும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

மீன ராசிக்கு 2,9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சை மூலதனமாக கொண்டவர்கள். குலத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாராள தன வரவால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.

புண்ணிய பலத்தை அதிகரிக்கும் தர்ம காரியங்களில் ஈடுபாடுவார்கள்.சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட கோவில் கட்டும் பணிகள் குடமுழுக்கும் நடைபெறும். பலருக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் பெற உகந்த காலம். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

குருவின் வக்ர காலம் (மீன ராசிக்கு 2, 9ம் அதிபதியான. செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் சிலர் எதையாவது யோசித்து துக்க மிகுதியால் நிம்மதியான தூக்கத்தை தொலைப்பார்கள்.குறுக்கு வழியை கடைபிடித்தவர்கள் தர்மம், நேர்மை நியாயம் பற்றிப் யோசிப்பார்கள். மன மாற்றத்திற்கு குறுகிய காலத்திற்கு வெளிநாடு,வெளி மாநிலத்திலுள்ள மகன் அல்லது மகள் வீட்டிற்கு சென்று வரலாம்.பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.

மீன ராசிக்கு 5ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் (29.11.2024 முதல் 4.2.2025 வரை) குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் ஆர்வம் குறைக்க வேண்டும். செயற்கை கருத்தரிப்பு முறைக்கு உகந்த காலம் அல்ல. பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாக்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்க வேண்டும்.

திருமணம்

ஒரு ஜாதகத்தில் எத்தகைய தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும். குருவின் பார்வை 7ம் மிடத்தில் பதிந்தாலும் 7ம் மிடத்தில் கேது இருப்பது சர்ப்ப தோஷ அமைப்பாகும். ராகு, கேது மற்றும் சனியின சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். சுய ஜாதக பரிசோதனை மிக அவசியம்.

பெண்கள்

வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் சிரமமான கடுமையான காரியங்களைக் கூட எளிதாக நடத்தி முடிப்பீர்கள். சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். நன்மையின் அளவை அளவிட முடியாத பிரமாண்ட வளர்ச்சி உண்டு. எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

மாணவர்கள்

3ம்மிடத்திற்கு குரு செல்வதால் சில குழந்தைகள் பள்ளியை மாற்ற நேரும்.எதிர்கால கல்வியைத் திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் விலகும்.டிவி, மொபைல் போன்ற வற்றிலிருந்து விடுபடுவார்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெறுவீர்கள். சாதிக்க களம் தேடும் இளைஞர்களுக்கு சாதகமான காலம்.உயர் கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும்.சிலர் உயர் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

 பரிகாரம்

குரு பலம் சிறப்பாக இருந்தாலும் ராசியில் ராகு 7ல் கேது இருப்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரங்களை தினமும் முடிந்தளவு பாராயணம் செய்தால் நற்பலன்கள் தேடி வரும் சரபேஸ்வரரை வணங்க ஞாயிற்று கிழமை உகந்த நாளகும் அன்று, அசைவ உணவுகள் உண்ணாமல், உடல், மன சுத்தி செய்து கொண்டு ராகு காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரர் சந்நிதி முன்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நீங்கி வெற்றி கிடைக்கும்.

Similar News