துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:24 GMT   |   Update On 2023-04-15 13:33 GMT

கலையார்வம் நிறைந்த துலாம் ராசியினரே இதுவரை ராசிக்கு 6ம்மிடத்தில் நின்ற குரு பகவான் ராசிக்கு ஏழாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

சமசப்தம குருவின் பொது பலன்கள்:

துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குருபகவான் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், கூட்டுத் தொழில் பற்றிக் கூறும் ஏழாமிடம் செல்கிறார்.வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலரின் வாழ்க்கை நிகழ்வுகள், கடவுளின் நேரடிகண்காணிப்பில் இருப்பது போல் தோன்றும். அவர்களைப் பார்த்து கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவதுண்டு. இப்பொழுது இந்த குருப்பெயர்ச்சியில் கொடுத்து வைத்தவர்கள் துலாம் ராசியினர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நீங்கள் தன் பார்வை பலத்தால் கோடி புண்ணியம் தரும் குருபகவானின் நேரடி பார்வைக்கு செல்லப் போகிறீர்கள். இதை விட வேறு - என்ன வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் அடைய வேண்டும் என்று லட்சியமாக நினைத்துக் கொண்டு இருந்தீர்களோ அந்த இலக்கை எட்டிப் பிடிக்க குருபகவான் அருளப்போகிறார்.

அதுவும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியின் மூன்றாம் பார்வையில் சஞ்சரிப்பது மிகச் சிறப்பு. இதனால் உங்களுக்கு இருந்த பயம், வெறுமை, தனிமையுணர்வு அகலும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம், தைரியம் உண்டாகும். அதிர்ஷ்டம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டப் போகிறது. அச்சுறுத்திய ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். இந்த ஓராண்டுக்குள் குரு பகவான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியே தீருவார்.

எல்லாம் விதித்தபடி தான் நடக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனாலும் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற சூட்சுமமும் உலகை ஆண்டு கொண்டு தானே இருக்கிறது. விதியை மதியால் வெல்லும் கலையை குருபகவான் உங்களுக்கு அருளப்போகிறார்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. ஒருவருடை ஜாதகத்தில் குருபகவான் இரண்டு விதத்தில் பலன் தருவார். ஒன்று சுய ஜாதக ரீதியான பலன். இரண்டு கோட்சார ரீதியான பலன். சுய ஜாதக ரீதியான பலன்கள் வாழ்நாள் முழுவதும் சிறிதுசிறிதாக கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் கோட்சார ரீதியான பலன்கள் சுபமோ, அசுபமோ ஓராண்டுக்குள் நடந்து முடியும்.இதுவரை உழைத்த உழைப்பிற்கான பலன் கூட்டு வட்டியோடு லாபமாக கிடைக்கப் போகிறது.. மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் ஏற்பட்ட பாகப்பிரிவினை சுமூகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இழுத்து மூடும் நிலையில் உள்ள தொழில்கள் கூட விறுவிறுப்பாகும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: ராசியில் குருவின் நேரடி ஏழாம் பார்வை பதிகிறது. இதனால் பேச்சிலே மிடுக்கு, நடையில் கம்பீரம், தோற்றத்தில் டாம்பீகம் உருவாகும். நடை, உடை, பாவனை மாறும். தகுதி, திறமை, வசதி எல்லாம் உயரும் .கடன் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.வராக்கடன்கள் வசூலாகும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய பகைமை மாறும். தொழில் முன்னேற்றம் கருதி ஒற்றுமையாக உழைப்பார்கள். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபட்டு சுயமாக தொழில் துவங்கலாம். கணவன், மனைவி அன்பு பெருகும். ஈகோ காரணமாக விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் சேர்ந்து வாழக்கூடிய சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவி உங்கள் மனதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இல்வாழ்க்கை இனிமையாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

ராசிக்கு மூன்றாமிட மான சகாய, வெற்றி ஸ்தானத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது.உங்களின் எண்ணங்கள், முயற்சிகள் உயர்வானதாக இருக்கும்.நீண்ட காலமாக முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அண்டை அயலாருடன் நிலவிய எல்லைத் தகராறுகள் முடிவுக்கு வரும்.சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். சுகங்களும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் வேறு மதத்திற்கு மாறியவர்கள் மீண்டு சொந்த மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். நல்ல நம்பிக்கையான திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்-  22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசியில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விலகிப் போன சொந்தங்கள் விரும்பி வருவார்கள். உங்களை விமர்சித்தவர்கள் கூட உண்மையான திறமை உணர்ந்து வாழ்த்துவார்கள். கவலை, கஷ்டங்கள் நீங்கி ஆனந்தம் அடைவீர்கள். மனதில் இருந்த பெரிய பாரம் விலகியது போன்று உணருவீர்கள். போதுமடா மனிதப் பிறவி என்று நொந்தவர்களுக்கு கூட வாழ வேண்டும் என்ற ஆசையும், வாழ்க்கையில் பிடிப்பும் உண்டாகும். புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றியை உறுதி செய்வீர்கள்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்-  22.6.2023 முதல் 17.4.2024 வரை

ராசி மற்றும் எட்டாம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.தொழில், பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி, கூட்டுத் தொழில் என பல வகையில் வருமானம் பெருகும். பொன், பொருள், வெள்ளி , ஆடை, ஆபரணம் வாங்குதல் என வாழ்வாதாரம் கூடும். வீடு வாங்குதல், வீடு கட்டுதல், இரண்டு, நான்கு சக்கரம் வாங்குதல் சுப செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மேல் இருந்த வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனைகள் சீராகும். இது வரை வெளிநாட்டு காற்றை சுவாசிக்காதவர்களுக்கு வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை

லாபாதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயரும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும்.திடீர் பெயர் புகழலால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீடு தேடி வருவார்கள். தொய்வு இல்லாத முயற்சியும் துவண்டு போகாத மனமும் உங்கள் முன்னேற்நத்தை அதிகரிக்கும். சிரமங்கள் குறையும்.

குருவின் வக்ர பலன்கள் : 4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.செயல் திட்டங்களை முறைப்படுத்துவதில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பக்கூடாது. சுய தொழில் எண்ணம் உருவாகும்.

பெண்கள் : மாமியார், மருமகள் பிரச்சனையில் மனம் உடைந்தவர்களுக்கு நிம்மதியும், தெளிவும் பிறக்கும். கணவர் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்.கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் கண் திறந்து விட்டார் என்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார குற்றம் விலகும்.

மாணவர்கள் : ராசியை குரு பார்ப்பதால் படிப்பு வேண்டாமென்று கல்வியை கைவிட்ட மாணவர்களை மீண்டும் கல்வி கரம் கொடுக்கும். ஆசிரியர், சக மாணவர்களுடனான பகைமை மாறிடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படித்த பாடம் மனதில் நன்றாக பதியும். உயர் ஆராய்ச்சி கல்வி மாணவர்களின் திறமை உலக அரங்கில் பேசப்படும்.

உத்தியோகஸ்தர்கள் : ஆறாமிட குருவால் ஆட்டம் கண்ட உத்தியோகம் மீண்டும் சீராகும். அவரவர் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்த அரசு உத்தியோகம், வெளிநாட்டு வேலை, உள்ளூர் வேலை கிடைக்கும். குறைந்த உழைப்பில் மன நிறைவான வருமானம் கிடைக்கும். விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் உண்டு. மேலதிகாரியால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உற்சாகம் பொங்கும்.

ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30,2023ல் ராசியில் உள்ள கேது பனிரெண்டாமிடம் செல்கிறார். ராகு ஆறாமிடம் செல்கிறார். ராகு/கேது ராசியில், ஏழாமிடத்தில் நின்ற காலத்தில் ஏற்பட்ட பங்கம் மறையும். அவமானம், மன சஞ்சலம் தீரும். கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்.

பரிகாரம் : சம சப்தம குரு பனிரென்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இது மிக அருமையான கிரக பலம்.கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வியாழக்கிழமை குரு ஓரையில் 3 நெய் தீபம் ஏற்றி வழிபட லாபக் கடலில் நீந்துவீர்கள்.ஜென்ம நட்சத்திர நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் தானம் கொடுத்து மகாலஷ்மியை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News