துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 05:59 GMT   |   Update On 2024-04-16 06:06 GMT

துலாம்-அஷ்டம குரு 50%

சுக்ர கடாட்சம் நிறைந்த துலாம் ராசியினரே!

இதுவரை சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியைப் பார்த்த குரு பகவான் இனி அஷ்டம ஸ்தானம் செல்கிறார். சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திலும் ராகு பகவான் ருண, ரோக,சத்ரு ஸ்தானத்திலும்,கேது பகவான் விரய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

அஷ்டம குருவின் பொதுபலன்கள்

துலாம் ராசிக்கு குருபகவான் 3, 6ம் அதிபதி. தற்போது கோட்சாரத்தில் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வது துலாம் ராசிக்கு சுபத்துவத்தை வாரி வழங்கும் அமைப்பாகும். 3, 6 எனும் மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியான குரு மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது விபரீத ராஜயோகம். துலாம் லக்னத்திற்கு கெட்டவனான குரு மற்றொரு கெட்ட ஸ்தானத்திற்கு செல்வது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். இனி ஒரு வருடத்திற்கு துலாம் ராசியினர் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறீர்கள். இது வரை தீர்க்கப் பட முடியாமல் கட்டப்பட்டு கிடந்த பல பிரச்சனைகளை முடிவிற்கு வந்து விடும்.

அதிர்ஷ்டம், திறமை, நேர்மை, சமுதாய அங்கீகாரம், போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். எந்த விதமான போட்டி பந்தயங்களாக இருந்தாலும் வெற்றி நிச்சயம். கிரகங்களின் இயக்கம் சாதகமாக உள்ளதால் பண வரவு அமோகமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் .பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். சுப விரயங்கள் கூடும். வரவிற்கு ஏற்ற விரயமும் இருக்கும். சுகமாக சொகுசான படுக்கையில் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். வெளிநாட்டு வேலை. தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை 12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் பதிகிறது. உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும்.வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமைகள் குறையும். தேவையில்லாத எண்ணங்கள் மன சஞ்சலம் அமைதியற்ற நிலை விலகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசுமரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு மிக சிறப்பான காலமாகும்.

பெயர், புகழ், பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். 12ல் கேது இருப்பதால் வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும்.

செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். வெளிநாட்டு பணம் குவியும். குழந்தைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குலதெய்வம் கடாட்சம் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் சம சப்தம பார்வை தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் ஆடம்பர விருந்த உபசாரங்கள் நடக்கும். இது வரை பேசாமல் இருந்த உறவுகள் அன்பு காட்டுவார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள், விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

சம்பந்திகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். கல்யாண வயதில் பிள்ளைகள் வைத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பந்தம் அமையும். வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். அதனால் சுப விரயங்கள் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் முன்னேற்ற மடையும்.

ஏற்கனவே கூட்டுத் தொழிலில் விரிசலை சந்தித்த கூட்டாளிகள் தங்கள் தவறுகளை உணர்ந்து தெளிந்து மீண்டும் தொழிலை நல்ல முறையில் நடத்துவார்கள். சிலருக்கு ஆத்மார்த்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.சிலருக்கு உள்ளுணர்வை புரிந்து செயல்படும் எதிர்பாலின நட்பு கிடைக்கும். வாடிக்கையாளர்கள், நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் 9ம் பார்வை 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது.வாழ்வில் தடைபட்ட அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். அறுவை சிகிச்சையில் மட்டுமே குணமாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிய நோய் எளிய வைத்தியத்தில் சீராகும்.புதிய சொத்துக்கள் உயர் ரக வாகனங்கள் சேரும்.உங்களின் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவீர்கள். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும்.

விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு முதலீட்டைத் திரட்டலாம். வீடு வாகன யோகம், திருமணம், பிள்ளைகளின் கல்வி, விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் என விரயத்தை புத்தி சாதுர்யத்தால் சுபமாக மாற்றி மகிழ்வீர்கள்.

அறுவை சிகிச்சையால் படுக்கையில் கிடந்தவர்களின் உடல் நிலை தேறும். உங்களை துரத்திய அவமானம் மற்றும் வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கின் தீர்ப்புகள் சாதகமாகும்.அடமான சொத்துக்கள், பொருட்கள் வீடு வந்து சேரும். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் சகோதரர்களிடம் இணக்கம் ஏற்படும். புதிய தொழில் முதலீடு செய்ய சரியான காலகட்டம்.தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும்

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

துலாம் ராசிக்கு லாபாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். இரண்டாவது திருமணம் நடைபெறும். விரும்பிய அனைத்து பலன்களும் நடக்கும். தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து, பணம் வரும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

துலாம் ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பல வருடங்களாக குழந்தை பாக்கியம் தாமதமாகியவர் களுக்கும், செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடியவர்களுக்கும் இயல்பாகவே குழந்தை பிறக்கும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15.5.2025 வரை)

துலாம் ராசிக்கு 2,7ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும்.அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள்.

பொருளாதாரத்தில் பிறருடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும்.

குருவின் வக்ர காலம்

துலாம் ராசிக்கு 2, 7ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை வக்ரமடையும் காலத்தில் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களைப் சந்திக்க வேண்டி வரும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது.

துலாம் ராசிக்கு கர்ம ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அகலக்கால் வைப்பதையும் அதிக முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் தொடர்பான விசயத்தில் ஆர்வம் குறைப்பது நல்லது.

திருமணம்

திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்.8ல் நிற்கும் குருபகவான் சம சப்தம பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் மாங்கல்ய தோஷம் அகலும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். 5ல் உள்ள சனி பகவானால் காதல் கை கூடும். மறுவிவாக முயற்சி வெற்றி தரும்.

பெண்கள்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.கடந்த கால மனக்கசப்புகள் குறையும். தொழில் உத்தியோக அனுகூலம் உண்டு தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். கணவன்-மனையிடையே நிலவிய பனிப் போர் மறையும். வேலைப் பளு அதிகமாகும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம்.

மாணவர்கள்

ஒருவரின் கல்வி நிலையை தீர்மானிக்கும் 4ம்மிடமான கல்வி ஸ்தானத்திற்கு கோட்சார குருவின் 9ம் பார்வை பதிகிறது. இது வரை கல்வியில் ஆர்வம் குறைவாக இருக்கும் பிள்ளைகள் கூட நன்றாக படிப்பார்கள். தெளிவான சிந்தனை மற்றும் மன நிம்மதியுடன் படிப்பார்கள். தாழ்வு மனப்பான்மை குறையும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பொது தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

 பரிகாரம்

கோட்சார கிரகங்களால் ஏற்படும் சுப பலன்களை முழுமையாக பெற வெள்ளிக்கிழமை விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட வேண்டும். பெளர்ணமி நாட்களில் லஷ்மி குபேரரை வழிபட சுப மங்களம் பெருகும்.

Similar News