சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

மாசிமாத ராசிபலன்

Published On 2024-02-12 04:10 GMT   |   Update On 2024-02-12 04:15 GMT

காரியத்தை கனகச்சிதமாக முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பண வரவும் திருப்தி தரும். கெட்டி மேளம் கொட்டும் சூழ் நிலையும் உருவாகும். கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் உடல் நலத்தில் கவனம் தேவை.

கும்பம்-புதன்

மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலைத்துறை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளிலும் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் மேல்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் இருந்த தடை அகலும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். திடீர் தனவரவு உண்டு.

மகரம்-சுக்ரன்

மாதத்தின் தொடக்க நாளிலேயே, மகரத்திற்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் திருமணங்களை முன் நின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கள் கிடைக்கும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம்.

மீனம்-புதன்

மார்ச்-2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் வருமான பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்வதில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி விடும். உறவினர் பகை அதிகரிக்கும். உடல்நலம் கருதி ஒரு தொகையைச் செலவிட நேரிடும்.

கும்பம்-சுக்ரன்

மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ராசிநாதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான நேரம் தான். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்பு களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு எதிர்பார்த்த படி கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு கரைந்த சேமிப்பு களை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 15, 16, 20, 21, 28, 29,

மார்ச்: 2, 3.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

Similar News