யாரை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்துள்ள மிதுன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும் இடம் 9-ம் இடமாகும். அங்கு சஞ்சரிக்கும் சனி பகவான் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குரு பலனும் நன்றாக இருக்கின்றது. தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்து பொருளாதாரத்தை சீர் செய்யும். தேங்கிய பணிகள் இனிமேல் துரிதமாக நடைபெறும்.
மேஷ-குருவின் சஞ்சாரம்!
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் குரு என்றாலும், அவர் பார்வைக்கு பலன் உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
தனுசு-சுக்ரன்!
ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும் பொழுது திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த கல்யாண முயற்சி இப்பொழுது கைகூடும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பழைய வாகனங்களின் பழுதுச்செலவை முன்னிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். விரயங்கள் அதிகரித்தாலும் நினைத்தது நிறைவேறும் நேரமிது.
மகர-புதன்!
ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அங்ஙனம் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன், மறைவிடத்திற்கு வரும் நேரம் நல்ல நேரம் தான். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்' என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆளுமைத் திறனால் உங்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கப் போகின்றது.
மகர-செவ்வாய் சஞ்சாரம்!
பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் உச்சம் பெறுகின்றார். அஷ்டமத்தில் செவ்வாய் உச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிகாலை முதல் இரவு வரை உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேரும். `பணம் கையில் தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். கடன் பிரச்சினையின் காரணமாக சிலருக்கு சொத்துக்களை விற்கும் சூழல் உருவாகலாம். திடீர் மாற்றங்கள் அடிக்கடி நிகழும்.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை பலப்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 19, 20, 25, 26, 27, பிப்ரவரி: 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.