மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 04:48 GMT   |   Update On 2024-03-13 04:50 GMT

விடா முயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மிதுன ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்துசேரும். உடல்நலம் சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவரோடு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இணைவதால், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். சொத்துப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களாலும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து அலை மோதும். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி மன வருத்தத்தைத் தரும். சிக்கல்களில் இருந்து விடுபடவும், செல்வ வளம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும், செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரக வழிபாடும் செய்வது நல்லது.

புதன் வக்ரம்

பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே அங்கு நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், இப்பொழுது வக்ரமும் பெற்று வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். பிறருக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். விற்பனை செய்த சொத்துக்களால் பிரச்சினைகள் உருவாகும். 4-ம் இடத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. தாய்வழி ஆதரவு குறையும்.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு உச்ச வீடாகும். மேலும் அவர் ஏற்கனவே மீனத்தில் இருக்கும் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே இக்காலம், உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல் நிறைய வந்துசேரும். சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திடீர் வரவு வந்து வளர்ச்சியை அதிகரிக்க வைக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பொருளாதாரம் உச்சம் பெறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக் கலக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசியர்களின் ஆதரவோடு படிப்பில் வெற்றி காண்பர். கலைஞர்கள் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் அடைவர். பெண்களுக்கு வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 14, 20, 24, 25, 26, ஏப்ரல்: 6, 7, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

Similar News