மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:17 GMT   |   Update On 2023-04-15 13:33 GMT

மிதுன ராசி அன்பர்களே இதுவரை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று சுப பலனை வழங்கிய குரு பகவான் 11ம்மிடமான லாப ஸ்தானம் சென்று தொடர்ந்து ஆதரவு வழங்கவுள்ளார். அக்டோடர் 30, 2023 வரை ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

லாப குருவின் பலன்கள்:

மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10ம் அதிபதி.பதினொன்றாமிடம் என்பது லாப ஸ்தானம். உபரி லாபத்தைக் கொடுக்குமிடம். 10மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று தொழில் வளர்ச்சியை அதிகரித்த குரு பகவான் அதை பல மடங்கு லாபமாக பெருக்கித் தரவுள்ளார். 7,10ம் அதிபதி குரு லாப ஸ்தானம் செல்வது மிகச் சிறப்பு. எதிர்பாராத மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். இதுவரை வருமானம், தொழில் பற்றிய சிந்தனையற்றவர்கள் கூட வளர்ச்சி பாதை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள்.

பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவதால் குரு, சனி சம்பந்தம் உங்களுக்கு வரமாக செயல்படும் காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.தன்னம்பிக்கை தைரியத்தோடு செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். சித்தப்பா, மற்றும் மூத்த சகோதரருடன் இணைந்து குலத் தொழில் செய்பவர்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. சுய ஜாதக தசா புத்தி சாதகமாக இருந்தால் இமாலய வளர்ச்சி நிச்சயம். லாப குருவாலும், பாக்கியச் சனியாலும் ஆடம்பர, சொகுசு வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாகும். இழுபறியாக இருந்த வழுக்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் தொல்லைகள் குறையத் துவங்கும். முதலீடுகள், சேமிப்புகள் அதிகமாகும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், வட்டித் தொழில் செய்பவர்களின் வருமானம் பல மடங்கு உயரும் . நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து சாதனை படைப்பீர்கள்.இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத மிதுன ராசியினர் பொருளாதாரத்தில் தன் நிறைவடைந்து செட்டிலாகுவீர்கள். நோயிலிருந்து பரிபூரண குணம் கிடைக்கும். மேலும் அஷ்டமச் சனியின் காலத்தில் ஏற்பட்ட அனைத்து இழப்புகளும் ஈடாகும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு மூன்றாமிடமான வெற்றி ஸ்தானம், முயற்சி, சகாய ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் வேலை, தொழிலுக்காக இடம் பெயருவீர்கள். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றலாம். தடை தாமதங்கள் விலகும். அனைத்து விதமான முயற்சிகளும் பலிதமாகும். உடன் பிறப்புகளுடன் நிலவிய சலிப்பு, சங்கடங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய அச்சம் விலகி மனதில் தைரியம் குடிபுகும். செவித்திறன் குறைபாடு சீராகும். இழுபறியாக கிடந்த பேச்சு வார்த்தைகள், பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். பாகப்பிரிவினை, உயில் எழுத உகந்த நேரம். அண்டை அயலாருடன் உள்ள எல்லைத் தகராறு முறையான ஆவணங்கள் மூலம் சீராகும். அடமான சொத்துக்கள், நகைகள் மீண்டுவரும். உங்கள் பெயர், புகழ், பரவும். வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர், புகழ் தகவல் தொடர்பு சாதனங்கள் யூடியுப், பேஸ்புக், டிவி, பத்திரிக்கைகள் மூலம் வெளி வரும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருப் பார்வை பதிகிறது. ஐந்தாமிடம் என்பது பதவி ஸ்தானம். பூர்வ புண்ணிய ஸ்தானம். கவுரவப் பதவியில் நிலவிய பிரச்சனைகள் சீராகும். சிலருக்கு புதியதாக கவுரவப் பதவி கிடைக்கும். காதல் திருமணத்திற்காக உங்களை தள்ளி வைத்த குடும்ப உறவுகள் ஏற்றுக் கொள்வார்கள். இதுவரை புத்திர பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும். ஒரே குழந்தை இருந்தவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். பூர்வீகம், குலதெய்வம் தெரியாதவர்களுக்கு அது பற்றிய தகவல் கிடைக்கும். குல தெய்வ கோவிலில் முதல் மரியாதை கிடைக்கும்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். சொத்தில் முறையான பங்கீடு கிடைக்கும். பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகரிக்கும். நிரந்தர வருமானத்திற்கு வழி பிறக்கும். சிலருக்கு புதியதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு ஏழாமிடத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் சுய ஜாதக ரீதியான பாதிப்பு அறிந்து உரிய பரிகாரம், வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க 30,40வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திருமணத் தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். அஷ்டமச் சனியின் காலத்தில் விவகாரத்து பெற்ற சிலர் மீண்டும் சேர்ந்து வாழத்துவங்குவார்கள்.சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பித்ருகள் வழிபாடு மற்றும் திலஹோமம் செய்து பாக்கிய பலனை அதிகரிக்க உகந்த காலம் தடைபட்ட பழைய நண்பர்களின் நட்பு மீண்டும் கிடைக்கும். பிரச்சனையாக இருந்த பழைய தொழில் கூட்டாளி விலகுவார் தகுதி, திறமை, பொருளாதார வசதி நிறைந்த புதிய தொழில் கூட்டடாளி கிடைப்பார். சிலருக்கு வாழ்க்கைத் துணை அல்லது மாமனார் மூலம் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணி செய்து மகிழ்வீர்கள். குல, இஷ்ட, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும். பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்து பார்க்கும் பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் மாந்தரீகம் கற்பார்கள்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

பரணி சுக்கிரனின் நட்சத்திரம். மிதுன ராசிக்கு 5,12ம் அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாட்டு வேலை தொடர்பான முயற்சி பலிக்கும்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து சில மாதம் தங்கிச் செல்லலாம்.வீடு, வாகன யோகம் உண்டாகும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். பாகப்பிரிவினை துரிதமாகும். சொத்துக்கள் மற்றும் சேமிப்புகளின் மதிப்பு உயரும். உற்றார், உறவினர்கள் வியக்கும் வகையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். ராசிக்கு மூன்றாம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிக்கலான காரியங்கள் கூட நல்ல விதமாக முடியும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாமனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தொலைந்து போன முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் கிடைக்கும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் தொழில் போட்டி அதிகரிக்கும். தொழிலில் லாபம் குறையும். மூத்த சகோதரம் மற்றும் சித்தப்பா மூலம் சில அசவுகரியங்ள் உண்டாகும்.

பெண்கள் :

குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் நடத்த மனக் கசப்பான பிரச்சனைகள் படிப்படியாக மாறும். பழைய ஆபரணங்களைக் கொடுத்து விட்டு புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் உத்தியோக ரீதியான முன்னேற்றம் உண்டு.

மாணவர்கள்:

உடல் சோர்வு மனச் சோர்வு நீங்கும். கல்வியில் மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் படிக்க முடியும். படிக்கும் பாடம் ஆழ் மனதில் பதியும்.பெற்றோர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் நல்ல பெயர் எடுத்து தருவீர்கள். மேற்படிப்பிற்கு அரசின் சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் வருவதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணி உயர்வு, ஊதிய உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. அரசு உத்தியோகத்திற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணி நிரந்தரமாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மனம் மகிழும் இடமாற்றம் உண்டு.

ராகு/கேது பெயச்சி :

அக்டோபர் .30, 2023ல் ராகு பத்தாம் இடத்திற்கும். கேது நான்காமிடத்திற்கும் செல்கிறார்கள். எனவே சொத்து தொடர்பான முயற்சிகளில் ராகு/கேது பெயர்ச்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்த்தனையில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் :

தொழில் லாபம் எல்லாக் காலத்திலும் கிடைக்காது. பணம் கிடைப்பது எளிதல்ல. பணம் தேடி வரும் பொழுது அதை சேமித்து வைத்தால் கஷ்ட காலத்திற்கு உதவும். மிதுன ராசியினர் புதன்கிழமை துளசி அர்ச்சனை செய்து சக்ரத்தாழ்வாரை வழிபட சுய ஜாதக ரீதியான தோஷம் விலகி லாப குருவால் நன்மைகள் அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் திருநங்கைகளின் உணவு, உடை போன்ற முக்கியத் தேவையறிந்து உதவ வேண்டும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News