மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 05:38 GMT   |   Update On 2024-04-16 06:34 GMT

மிதுனம்- விரய குரு 50%

புத்தி கூர்மை நிறைந்த மிதுன ராசியினரே!

இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுப பலன்களை வழங்கிய குரு பகவான் மே 1, 2024 முதல் அயன, சயன, விரய ஸ்தானமான 12ம்மிடம் செல்கிறார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நிற்கிறார். கேது பகவான் சுக ஸ்தானத்தில் நிற்கிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் நிற்கிறார்.

விரய குருவின் பொது பலன்கள்

மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் 12ம்மிடமான மோட்ச ஸ்தானம், விரய ஸ்தானம், வெளிநாட்டுப் பயணம் பற்றிக் கூறுமிடம். மனது பண்படும். சேவை மனப்பான்மை அதிகமாகும். மனம் பற்றற்ற நிலைக்கு செல்லும். எதிர்பார்ப்புகள் குறையும்.

தனித்திறமையால் உன்னதமான உயர்வான நிலையை அடையப் போகிறீர்கள்.வாழ்க்கையில் செழுமை அடையத் தேவையான நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரப்போகிறது. வாழ்வாதாரம் உயரப் போகிறது. மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள்.

உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உண்மை, நாணயம், சத்தியம், மோட்சம் பற்றிய சிந்தனை மிகையாகும்.தனிமையை, அமைதியை மனம் விரும்பும்.

ஒருவருக்கு ஏற்படும் விரயத்தை சுப விரயம் அசுப விரயம் என இரண்டாக வகைப்படுத்தலாம். சுப விரயம் என்றால் மன நிறைவோடு குடும்பத்தின் நிகழ்கால எதிர்கால தேவைக்காக செய்யப்படும் முதலீடாகும். அசுப விரயம் என்றால் காலத்தின் கட்டாயத்திற்காக விருப்பமில்லாம் செலவிடும் தொகையாகும்.

குரு கடாட்சத்தால் வீடு, வாகனம்,நகை, ஆடம்பர பொருட்கள், பிள்ளைகளின் சுப செலவு என சுப விரயங்களால் மனம் மகிழப்போகிறது. படுத்தவுடன் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவீர்கள். வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

விரய குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. 4ம்மிடம் என்பது சுக ஸ்தானம்.சொத்து சுகம் ஆரோக்கியம் பற்றிக் கூறுமிடம். உடல் சோர்வு, தூக்கமின்மை விலகும்.தாயின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பூர்வீகச் சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படும். அடமான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். விலை உயர்ந்த அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.தாய் வழி உறவுகளிடம் நெருக்கம் அதிகரிக்கும்.பொதுச் சேர்வையில் ஆர்வம் அதிகமாகும்.

வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். வெளிநாட்டுச் சுற்றுலா சென்று ஆனந்தம் அடைவீர்கள். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். மூத்த சகோதர சகோதரிகள். மூலம் ஆதாயம் ஏற்படும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். குடும்பம் ஒரு கோவிலாக இறைவனின் இருப்பிடமாக மாறும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு குருவின் 7ம் பார்வை பதிகிறது.வறுமை, தரித்திரம், இயலாமை விலகி உங்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் மிளிரப்போகிறது. கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் வந்து விடாது.

கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம் குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும். கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை உருவாக்கும். பொருளாதார வரவை திட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார்.

உடல் ஆரோக்கியம் சீராகும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்படத் தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.செய்வினை. கண் திருஷ்டி அகலும். அக்கம்பக்கம் உள்வர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் 9ம் பார்வை ஆயுள், வம்பு, வழக்கு ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும்.வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கம் முடிவுக்கு வரும். மன வேதனை மற்றும் அவமானப் படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கணவனுக்கோ, மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம் போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, புதையல் , உயில் மூலம் கிடைக்கலாம்.ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை அடைக்கும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை)

மிதுன ராசிக்கு 3ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிக்கலான காரியங்கள் கூட நல்ல விதமாக முடியும். மாமனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.தொலைந்து போன முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் கிடைக்கும். ஊடகங்களின் பணி புரிபவர்களின் திறமை போற்றப்படும்.நூல்கள் இயற்றுதல், நாவல் எழுதுதல் போன்றவற்றில் நாட்டம் ஏற்படும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். மந்த தன்மை விலகும்.உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

மிதுன ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் பேச்சால் வாக்கு வன்மையால் எதையும் சாதிப்பீர்கள் பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும்.

வாக்குவன்மை வாக்குப்பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிப்பீர்கள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத்திற்கான வழி தென்படும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

மிதுன ராசிக்கு 6, 11ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கர்ம வினைத் தாக்கத்தால் ஏற்படும் பரம்பரை வியாதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் நிவாரணம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும்.

குருவின் வக்ர காலம் (மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் முன் கோபத்தால் சில முன்னேற்றத் தடை உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச் சுமை அதிகமாகும். மன நிறைவு இருக்காது. மலைபோல் நம்பிய சில முக்கிய நபர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடலாம். கடனுக்கு பயந்து மன சஞ்சலத்தில் ஆரோக்கிய குறைபாட்டை வரவழைத்துக் கொள்வார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

திருமணம்

பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் பாக்கியாதிபதி சனி பகவான் மிதுனத்திற்கு அவரவரின் வயதிற்கு ஏற்ப நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களை இந்த ஒரு வருடத்தில் வழங்கிவிடுவார். எனவே சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். நின்று போன திருமணம் பேச்சு வார்த்தையில் வெற்றி தரும். மறுமண முயற்சி பலிக்கும்.

மாணவர்கள்

ஒருவரின் கல்வி நிலையைப் பற்றிக் கூறும் 4ம் மிடத்திற்கு குருப் பார்வை உள்ளது. அங்கே ஞானகாரகன் கேது பகவான் உள்ளார். 10, 12ம் வகுப்பு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எந்த முறையில் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்ற அனுபவ உண்மை புலப்படும்.

பெண்கள்

பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக இருப்பார்கள். குடும்பம் நலனுக்காக உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மறைமுக வருமானம் அதிகரிக்கும்.சில பெண்களுக்கு புதிய சுய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர்.

பரிகாரம்

விரய குருவால் ஏற்படும் விரயங்களை சுப மாக்க லட்சுமி நாராயணரை வழிபடுவது நல்லது.

Similar News