கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:28 GMT   |   Update On 2023-04-15 13:32 GMT

காரியவாதியான கும்ப ராசியினரே இதுவரை ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மூன்றாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

மூன்றாமிட குருவின் பொது பலன்கள் :

கும்ப ராசிக்கு தன, லாபாதிபதியான குருபகவான் மூன்றாமிடமான தைரிய, வீரிய, சகாய, இளைய சகோதர ஸ்தானம் செல்கிறார். 2, 11ம் அதிபதியான குரு பகவான் 3ம்மிடம் செல்வது சிறப்பு. 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நின்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்த குருபகவான் முயற்சி ஸ்தானம் எனும் உப ஜெய ஸ்தானம் செல்வதால் தொடர்ந்து குரு கடாட்சம் கிடைக்கப் போகிறது.

ஜென்ம ராசியில் சனி பகவான் இருக்கிறார், இந்த நிலையில் அக்டோபரில் ராகு/கேது பெயர்ச்சியாகி 2 , 8ம்மிடத்திற்குள் நுழைகிறார்கள் என்ற பய உணர்வு தேவையில்லை. ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியாகிய சனி பகவான் தனது 3 ம் பார்வையால் 3ம்மிடத்தில் உள்ள தன, லாபாதிபதி குருவை பார்ப்பதால் தன வரவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் கூடும். முயற்சிகளில் தளர்வில்லாத வெற்றி கிடைக்கும்.தொட்டது துலங்கும். ஞாபக சக்தி கூடி செயல்திறன் அதிகரிக்கும். தெளிவான பேச்சு, தைரியமான செயல்பாடுகள், பண்பான நடவடிக்கைகள் இவை அனைத்தும் சமுதாயத்திற்கு உங்களை அடையாளம் காட்டி பிரபலம் அடையச் செய்யப்போகிறது. இது வரை வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்த உங்களின் திறமைகள் தகவல் தொடர்பு சாதனங்களான யூடியுப், இன்ஸ்டாகிராம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி மூலம் வெளிவரும். உங்களுடன் பிறந்த சகோதரர்களுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை உயரும்.

சகோதர, சகோதரிகளின் சண்டைகள் அன்பாக மலரும். தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். மாமனாருடன் புரிதல் ஏற்படும். சிலருக்கு மாமனார் மூலம் பெரும் பொருள், பணம், தங்கம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.இது வரை குண்டு மணி தங்கம் கூட வாங்கி அனுபவிக்காதவர்களுக்கு தங்க நகைகள் வாங்கி அணிந்து மகிழும் யோகம் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் குணமாகும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. சம்மந்திகள், மாமன், மைத்துனன், தொழில் கூட்டாளிகள் உறவு பலப்படும். சிறு வயது பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நட்பால் தீரும். தொழிலுக்கு தகுதி திறமை வாய்ந்த நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். குடும்ப ரீதியான விசயங்களுக்கு சேர்ந்து முடிவு எடுப்பார்கள். ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். விவாகரத்தான சில தம்பதிகள் கூட இணைந்து வாழத்துவங்குவார்கள்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. வெளிநாட்டிற்கு சென்று குடிபுகலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலரின் தந்தை தொழில், வேலைக்காக வெளிநாடு சென்று தங்கலாம். ஆன்மீக நாட்டம் மிகும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும்.மத்திம வயதினருக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். வயோதிகர்களுக்கு கொள்ளு பேரன், பேத்தி பிறப்பார்கள். சிலர் சொத்து , வியாபாரத்தை பாகப் பிரிவினை செய்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்புவார்கள்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இழுத்து மூடும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பாக சூடு பிடிக்கும். நல்ல கணிசமான லாபம் கிடைக்கும். கடன் தொல்லையி லிருந்து விடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். பொன், பொருள், ஆடம்பரப் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இதுவரை பாராமுகமாக பேசாமல் இருந்த சித்தப்பா, பெரியப்பா, உடன்பிறந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வழக்குகளில் வெற்றி அல்லது சாதகமான திருப்புமுனை ஏற்படும்.ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தந்தையின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். தந்தையின் அன்பு, ஆதரவு பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் நிலவிய பங்காளிச் சண்டை பிரச்சனைகள் விலகி பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வரும். சிலருக்கு ஆன்மீக குருமார்களின் தீட்சைகள், உபதேசம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரித்து ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வரலாம். சிலர் தொழில் அல்லது வேலைக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை

கும்ப ராசிக்கு 4,9ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். தாய், தந்தை உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. ஏற்கனவே வாங்கிய சொத்துக்களின் மதிப்பு உயரும். கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் தரும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

கும்ப ராசிக்கு ஏழாம் அதிபதியாகிய சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கல்வி, வேலை, பொருளாதாரம், குழந்தை பாக்கியம் திருமணம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் தடைபட்ட பல நல்ல விசயங்கள் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் வெற்றி கொடுக்கும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட வேண்டும். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு திருமணம் நடக்கும்.

பெண்கள் :

நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிறந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். கணவன், மனைவி ஈகோ தணியும். ஆடம்பர பொருட்கள் சேரும்.

மாணவர்கள் :

கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால கல்வியை திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நல்ல சிந்தனைகள் தோன்றும். படித்த பாடம் நன்றாக ஞாபகத்தில் இருக்கும். முயற்சி ஸ்தான குரு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கப் போகிறார்.

உத்தியோகஸ்தர்கள் :

நீங்கள் வேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று சொன்னால் நிர்வாகம் உங்களை விடாது. அது மட்டுமா உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவார்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். புதியதாக வேலை தேடும் இளைஞர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பை முதலில் பயன்படுத்துவது நல்லது.

ராகு/கேது பெயர்ச்சி :

அக்டோபர் 30,2023ல் ராகு 2ம்மிடம் செல்கிறார். கேது எட்டாமிடம் செல்கிறார். தாராள பொருளாதார உயர்வு ஏற்படும். அடிக்கடி உற்றார், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது அறிவாற்றல் உலகப் புகழ் பெறும். திறமைகள் பாராட்டப்படும். வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி தரும். குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

பரிகாரம் :

பனிரென்டு ராசிகளில் குரு நின்ற மற்றும் பார்வை பட்ட இடங்களின் மூலம் மிகுதியான சுப பலன்களை பெறுபவர்கள் கும்ப ராசி என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் ஜென்மச் சனி மற்றும், ராகு/கேதுவினால் ஏற்படும் இன்னல்களும் கட்டுப்படும். தினமும் மாலை நேரம் 4.30 முதல் 6 மணி வரை சரபேஸ்வரரை வழிபட வளர்ச்சி கூடும். ஜென்மச் சனியின் பாதிப்பு குறையும். ஜென்ம நட்சத்திர நாட்களில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும். தினமும் சிவ வழிபாடு செய்யவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News