கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 06:20 GMT   |   Update On 2024-04-16 06:25 GMT

கும்பம்- அர்தாஷ்டம குரு 50%

உயர்வான குணம் நிறைந்த கும்ப ராசியினரே!

இதுவரை முயற்சி ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே 1, 2024 முதல் சுக ஸ்தானம் சென்று அர்தாஷ்டம குருவாக பலன் வழங்கப்போகிறார். சனி பகவான் ஜென்ம ராசியிலும் ராகு பகவான் தனம்,வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

அர்தாஷ்டம குருவின் பொதுபலன்கள்:

கும்ப ராசிக்கு குரு பகவான் 2, 11ம் அதிபதி. தனாதிபதி மற்றும் லாபாதிபதி. தன லாபாதிபதி குரு 4ம்மிடமான சுக ஸ்தானம் செல்வது மிகச்சிறப்பு. லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தாய்வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். 2ம் அதிபதி குரு 4ம்மிடம் செல்வதால் இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.

விவசாயிகள் பண்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்ப்பவர்களுக்கு ஆதாயம் மிகும். விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சிலருக்கு அடமானத்திலிருக்கும் சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும்.

விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். ஆடம்பர பொருட்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடம்பரம், அந்தஸ்து நிறைந்த சொகுசு வீடு, வாகனம் அமையும்.தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

குருவின் 5ம் பார்வை ராசிக்கு 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. பய உணர்வு அகலும். புதிய தெம்பு, தெளிவு பிறக்கும்.இதுவரை உங்கள் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டு மறையும். நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது.

எட்டாமிடம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம். நோயின் வீரியம் குறைந்து வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சீராகும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய் சிறிய வைத்தியத்தில் சீராகும். மீள முடியாத வழக்கிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். எப்போதோ நடந்த விபத்திற்கான நஷ்ட ஈடு இப்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம், சீதனம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

குருவின் 7ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், கடன் உதவியும் கிட்டும்.புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும்.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள் . மிகப் பெரிய புகழ் கிடைக்கும். செல்வச் செழிப்பு உருவாகும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள்.வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி,ஊதிய உயர்வு ஏற்படும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை:

குருவின் 9ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும். மன சஞ்சலம், மனக்குழப்பம் தடை தாமதங்கள், தூக்கமின்னை ஆகிய குறைபாடுகள் அகலும். வரவுக்கு மீறிய செலவு மற்றும் வீண் விரயங்கள் அதிகமாகும்.

சிலர் வைத்தியத்திற்காக தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். கண்களில் பார்வை குறைபாட்டை சீர் செய்ய உகந்த காலம். மகான்களின் ஆசிகள், மந்திர உபதேசங்கள் கிட்டும்.

நீத்தார் கடன் தொடர்பான வழிபாடுகள் பலன் தரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம், ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்றுவருவீர்கள்.

பிரயாணத்தின் போது பொருள் இழப்பு,திருட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும்.

சுய ஜாதகத்தில் வலுவான தசா புக்தி இருந்தால் ஏற்றுமதி, இறக்குமதி மூலம் பெரும் லாபம் கிடைக்கும். சுய ஜாதகத்தில் வலிமையற்ற தசா புக்தி இருப்பவர்களின் எதிர்மறை எண்ணம், பய உணர்வு மட்டுப்படும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

கும்ப ராசிக்கு 7ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ராசிக்கு 7ம் மிடத்திற்கு சனி பார்வை இருப்பது சனி தோஷம். 2ல் ராகு, 8ல் கேது நிற்பது சர்ப்ப தோஷம். இது போன்ற காரணங்களால்திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும்.

திருமண விஷயத்தில் மன வேதனைய உருவாக்கும் அல்லது விருப்பம் இல்லாத திருமணம் நடக்கும் காலம் என்பதால் திருமணத்திற்கு காத்து இருப்பவர்கள் அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும்.தன் குலத்திற்கு விரோதமான திருமணம், தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம். நண்பர்கள். தொழில் கூட்டாளிகள் வாழ்க்கை துணை மற்றும் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன் உண்டு.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

கும்ப ராசிக்கு 6ம் அதிபதியான சந்தரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு தந்தையின் அரசுப்பணி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். திரைக் கலைஞர்களுக்கு பிற மொழிப் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். வங்கிகள், பைனான்ஸ் கம்பெனிகள் உங்களுக்கு கடன் கொடுக்க வீடு தேடி வருவார்கள்.

குடும்ப தேவைகள் சுப நிகழ்விற்காக வைத்தியத்திற்காக கல்விக்காக கடன் பெறலாம். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம்.மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15.5.2025 வரை)

கும்பராசிக்கு 3, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் உங்களின் புகழ், தைரியம், நம்பிக்கை, வீரம், விவேகம் அதிகமாகும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள்.

செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். புத்திர பிராப்தத்தில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும்பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். பாகப் பிரிவினையில் நிலவிய சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நெடுங்காலமாக முறைப்படுத்த முடியாத பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

குருவின் வக்ர காலம்:(கும்பராசிக்கு 3, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

குரு வக்ரமடையும் காலத்தில் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் சொத்தை இளைய சகோதரம் தனக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு மேலோங்கும்.நல்ல பங்குதாரரை இழப்பது அல்லது டூபாக்கூர் பங்குதாரரை சேர்ப்பது போன்ற தவறுகள் நேரலாம்.

கும்ப ராசிக்கு 6ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் தேவையில்லாத கடன் சிரமம் தரும் என்பதால் கடன் வாங்குவதை தவித்தல் நலம். இயன்றவரை வம்பு, வழக்கு பிறர் விவகாரஙகளில் தலையீட்டை குறைத்தல் நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவது, கடன் கொடுப்பது, வெற்று காசோலை தருவது போன்றவற்றில் கவனம் தேவை.

பெண்கள்:

சகாயங்கள் நிறைந்த குருப் பெயர்ச்சி. கம்பீரமான வசீகரமான தோற்றம் ஏற்படும்.குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். அரசு வேலை கிடைக்கும். தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும்.

 பரிகாரம்:

சிவாலயங்களில் உழவார பணிகளை மேற்கொண்டால் பிறவி பயனை அடைய இயலும். வியாழக்கிழமை சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட தடையில்லாத முன்னேற்றம் தேடி வரும்.

Similar News