தொழில்நுட்பம்

பிப்ரவரி 24 ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சியோமி

Published On 2019-02-14 04:37 GMT   |   Update On 2019-02-14 04:37 GMT
சியோமி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவி்ல் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Xiaomi #MWC2019
 


சியோமி நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 CET மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) துவங்குகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமி Mi9 ஸ்மார்ட்போனினை இவ்விழாவில் காட்சிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.



இம்மாத துவக்கத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சியோமி எவ்வித சாதனங்களையும் அறிமுகம் செய்யவில்லை என்பதால், சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது சாதனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்வது பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

எனினும், சியோமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சியோமி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது.



Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவில் குவால்காம் தனது 5ஜி மோடெம் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 30 சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 X 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சாம்சங் 2019 ஆண்டிற்கான தனது முதற்கட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
Tags:    

Similar News