செய்திகள்

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டிப்பு- லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-05-30 11:22 GMT   |   Update On 2019-05-30 11:22 GMT
லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.   

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தது வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.

இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று விசாரணை தொடங்கியது. அப்போது நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை ஜூன் 27-ம்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News