செய்திகள்
வீராணம் ஏரி

குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2019-05-18 06:47 GMT   |   Update On 2019-05-18 06:54 GMT
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.



இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.

வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News