செய்திகள்

இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் தேர்வு

Published On 2019-05-18 04:36 GMT   |   Update On 2019-05-18 04:36 GMT
இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இதுநாள் வரை துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தலைவராக தேர்வாகி இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஆகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

பொதுச்செயலாளராக குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலுங்கானாவை சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக பால்ராஜ் சர்மா (பஞ்சாப்), ராஜீவ் சுகுமாறன் நாயர் (கேரளா), கமலேஷ் நானாவதி (குஜராத்), பியூஷ் சர்மா (மத்தியபிரதேசம்), அனில் வியாஸ் (ராஜஸ்தான்), இணை செயலாளர்களாக ஆர்.பி.பாண்டே (பீகார்), ரவின்கபூர்(உத்தரபிரதேசம்), மோகன் சதீஷ்குமார் (கர்நாடகா), அணில் காத்ரி (அரியானா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பதவி காலம் 4 ஆண்டுகளாகும்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயபிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்திய நீச்சல் சம்மேளனத்திற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச நீச்சல் போட்டிகளில் ‘பி’ பிரிவு தகுதி போட்டிகளுக்கு தேர்வு பெறுவதே இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கடினமாக இருந்தது. தற்போது நீச்சல் சம்மேளனம் மேற்கொண்டுவரும் பல்வேறு பயிற்சி திட்டங்களால் பெரும்பாலோர் எளிதில் தகுதி பெற்று வருகின்றனர். இதே போல் ‘ஏ’ பிரிவு தகுதி போட்டிகளுக்கும் தேர்வு பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தொழில்முறை விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு சார்பில் மாவட்டம் தோறும் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டு நல்ல கட்டமைப்பு வசதி உள்ளது. தமிழகத்தில் இருப்பதை போல மற்ற மாநிலங்களிலும் நீச்சல் குளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புனே, பெங்களூரு போன்ற இடங்களில் நீச்சல் அகாடமிகள் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகத்திலும் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் இருந்து 5 முதல் 10 பேர் வரை 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது இலக்காகும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவும் நீச்சல் போட்டியில் சிறந்த நாடு தான் என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம்.

இவ்வாறு ஜெயபிரகாஷ் கூறினார்.
Tags:    

Similar News