செய்திகள்

நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதற்கு அப்ரிடி முட்டுக்கட்டை போட்டார்: சல்மான் பட்

Published On 2019-01-02 12:56 GMT   |   Update On 2019-01-02 12:56 GMT
நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதற்கு அப்ரிடி முட்டுக்கட்டை போட்டார் என முன்னாள் கேப்டன் சமான் பட் குற்றம்சாட்டியுள்ளார். #Afridi #SalmanButt
பாகிஸ்தான் அணி கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது முகமது அமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் மூன்று பேருக்கும் தலா ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின்னர் முகமது அமிர் சர்வதேச அணிக்கு திரும்பினார். மற்ற இருவர்களும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பிடித்திருப்பேன். ஆனால் கேப்டனாக இருந்த அப்ரிடி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் என்று சல்மான் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சல்மான் பட் கூறுகையில் ‘‘தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் ஆகியோர் என்னை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்தனர். அப்போது என்னை வலைப்பயிற்சி எடுக்கச் சொல்லி உடற்தகுதியை பரிசோதனை செய்தனர்.

அப்போது வக்கார் யூனிஸ் என்னிடம் ‘‘பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாட மனதளவில் தயாரா?’’ என்று கேட்டார். நானும் ‘‘தயாராக இருக்கிறேன்’’ என்றேன்.

ஆனால், கேப்டனாக இருந்த ஷாகித் அப்ரிடி நான் அணிக்கு திரும்புவதற்கு முட்டுக்கட்டை போட்டார். அவரைத் தூண்டியது யார் என்பது எனக்குத் தெரியாது. அதே சமயத்தில் நான் அவரிடம் சென்று, இதுகுறித்து பேசவில்லை. அது சரியான விஷயமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், நான் தெரிந்து கொண்டது 2016 உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று வக்கார் யூனிஸ், பிளவர் கூறிய நிலையில், அப்ரிடி அதை தடுத்தார் என்பதைத்தான்’’ என்றார்.
Tags:    

Similar News