செய்திகள்
சாரதா நிதி நிறுவன மோசடி- கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஜீவ் குமார் இன்று கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை என்று கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்தது. அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.
இதனிடையே கடந்த மே 27-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க ‘லுக்அவுட்’ நோட்டீசும் பிறப்பித்தது. ஆனால் அவர் அன்று ஆஜராகவில்லை. அதற்கு பதில் வேறொரு நாளில் ஆஜராவதாக சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் ராஜீவ் குமார் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.