செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி பிளஸ்-2 மாணவர் பலி

Published On 2019-05-20 16:51 GMT   |   Update On 2019-05-20 16:51 GMT
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னிவாடி:

சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை கிராமத்தை சேர்ந்த மரியராஜ் மகன் ஜான்ஹென்றி (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று இவர் கன்னிவாடி அருகே கரிசல்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்தார்.

பின்னர் அவர் வட்டப்பாறையை சேர்ந்த சோனைமுத்து (31), கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (10) ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோனூர் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ஹென்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News