செய்திகள்

ஏலச்சீட்டு தகராறில் மோதல் - கணவன், மனைவி உள்பட 3 பேர் காயம்

Published On 2019-05-07 11:54 GMT   |   Update On 2019-05-07 11:54 GMT
பாக்கமுடையான்பட்டில் ஏலச்சீட்டு தகராறில் கணவன்- மனைவி உள்பட 3 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை பாக்கமுடையான்பட்டு வினோபா நகரை அடுத்த புதுநகரை சேர்ந்தவர் அருண் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வரும் பிரமிளாவிடம் தனது உறவினரை அறிமுகப்படுத்தி ஏலச்சீட்டில் சேர்த்து விட்டார்.

ஆனால், ஏலச்சீட்டு காலம் முடிந்தும் அதற்கான பணத்தை பிரமிளா கொடுக்கவில்லை. இதனை அருணிடம் அவரது உறவினர் முறையிட்டார்.

இதையடுத்து அருண் நேற்று பிரமிளாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் ஏலச்சீட்டு பணத்தை தரும்படி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரமிளா, அவரது கணவர் ராமதாஸ் மற்றும் உறவினர்களான நவீன், சூசை, வின்சென்ட் ஆகிய 5 பேரும் சேர்ந்து அருணை தாக்கினர். இதனை அறிந்த அருணின் மனைவி ஆதிலட்சுமி மற்றும் மகன் வீரசேகரன் ஆகியோர் பிரமிளா தரப்பினரிடம் தட்டிக்கேட்டனர். அவர்களையும் பிரமிளா தரப்பினர் தடி மற்றும் கல்லால் தாக்கினர்.

இந்த தாக்குதலில் அருண், ஆதிலட்சுமி, வீரசேகரன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் அருண், வீரசேகரன் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆதிலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அருண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரமிளா உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News