செய்திகள்

பொங்கலூர் அருகே அரசு பஸ் - கார் மோதி விபத்து - 2 பேர் பலி

Published On 2019-01-13 18:26 GMT   |   Update On 2019-01-13 18:26 GMT
பொங்கலூர் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
பொங்கலூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 35). அதே ஊரைச்சேர்ந்தவர் ஸ்ரீராம்(26). இவர்கள் இருவரும் அவினாசியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று அவினாசியில் இருந்து பொள்ளாச்சிக்கு வேலை விஷயமாக காரில் சென்றனர்.

காரை பெருமாநல்லூரை சேர்ந்த டிரைவர் நவநீதகிருஷ்ணன்(26) என்பவர் ஒட்டினார். பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வெங்கிட்டாபுரம் அருகே தனியார் கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சுடன் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் அமர்ந்திருந்த பிரகாஷ், ஸ்ரீராம் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த அரியலூரை சேர்ந்த ராஜவள்ளி(23) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News