ஆன்மிகம்

துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கி வினோத வழிபாடு

Published On 2019-05-27 04:50 GMT   |   Update On 2019-05-27 04:50 GMT
துறிஞ்சிப்பட்டியில் நடந்த மகாபாரத திருவிழாவில் துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாபாரத மகோத்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாணத்துடன் விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி துறிஞ்சிப்பட்டி, தின்ன கழனி, குட்டூர் உள்ளிட்ட 24 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய மகாபாரத நிறைவு விழா நடந்தது. இதையொட்டி தர்மபுரி ஓம் ஸ்ரீ விநாயகா நாடக சபா குழுவினரின் துரியோதனன் படுகளம் நாடகம் கோவிலின் முன்பு நடந்தது.

இதையொட்டி துரியோதனனை வதம் செய்த பாஞ்சாலி தேவி, தலை முடிச்சு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து துடைப்பத்தால் பக்தர்கள் தலையில் அடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநங்கையிடம் துடைப்பத்தில் தலையில் அடி வாங்கினார்கள். இந்த படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News