ஆன்மிகம்
பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டத்திற்கு தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2019-05-16 05:19 GMT   |   Update On 2019-05-16 05:19 GMT
வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி, எல்லை கட்டுதல் நடந்தது. தொடர்ந்து வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மனுக்கு தேரடி வீதியில் சிறப்பு பூஜைகளும், பிடாரி அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம, பல்லக்குகள், பூத வாகனத்தில் பாடலீஸ்வரர் வீதிஉலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காமதேனு, கற்பக விருட்சம், நாக வாகனத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது இளைஞர்கள், முதியவர்கள் சிலம்பம் ஆடியப்படி ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து அதிகாரநந்தி கோபுர தரிசனமும், தெருவடைச்சான் உற்சவமும் நடந்தது. அதையடுத்து யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று கோபுர தரிசனமும், மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) காலையில் குதிரை வாகனம், இரவு தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

அதை தொடர்ந்து அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். தேர் மாலையில் நிலையை வந்தடை யும். இதையொட்டி கடலூர் தேரடி தெருவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம், 20-ந்தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
Tags:    

Similar News