ஆன்மிகம்
அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்த போது பக்தர்கள் திரளாக நின்று சாமி தரிசனம் செய்த காட்சி.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2019-05-02 06:41 GMT   |   Update On 2019-05-02 06:41 GMT
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாயம் சார்பில் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், 1 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு பூப்படைப்பும், அதை தொடர்ந்து அம்மன் அங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய வாகன பவனி வீதி, வீதியாக சென்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அம்மனுக்கு அன்னம் படைத்து வழிபாடு நடைபெற்றது.

நேற்று மதியம் பூப்படைப்பு, அம்மன் நீராடுதல் நிகழ்ச்சி, வில்லிசை, கரகாட்டம் ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முக பெருமாள் மற்றும் நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News