சினிமா
தளபதி 63 படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட அரங்கம்
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்திற்காக பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதுபற்றி படக்குழுவினர் ஒருவர் கூறியதாவது:-
``இந்த படத்துக்கு `வெறித்தனம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இணையதளங்களில் பொய்யான தகவல் பரவியிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நெருங்கும்போது, பெயர் சூட்டப்பட இருக்கிறது.
பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் காரணம் ``நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்'' என்று அவர் சொன்னதால்தான், சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு சென்றிருக்கிறார்.
அவர் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.'' என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee