search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்சம்பர்க் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
    X

    லக்சம்பர்க் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

    அரசுமுறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்து பேசினார். #SushmaSwaraj
    லக்சம்பர்க் சிட்டி:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.


    இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் இன்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பயணத்தின் இறுதிக்கட்டமாக பெல்ஜியம் நாட்டுக்கு செல்லும் அவர் 23-ம் தேதிவரை அங்கு தங்குகிறார். ப்ருசெல்ஸ் நகரில் பெல்ஜியம் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான டிடியெர் ரெய்ண்டெர்ஸ் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் அண்டோனியோ டஜானி ஆகியோரை சந்தித்து ஐரோப்ப்பிய யூனியன் - இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் சுஷ்மா அங்கு நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் தலைமையேற்பதுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj

    Next Story
    ×