search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது
    X

    பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் இன்று நடைபெற்றது. #Royalwedding #PrinceHarry #MeghanMarkle
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை ஒட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை கடவுள் ஆசீர்வதிப்பாராக. அவர்கள் இருவரும் கடவுளின் அன்பால் நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

    திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. அதனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.



    இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் இங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது


    இதுதவிர, எங்கிருந்து மணவிழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக அந்த இடத்திற்கு வந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள்.



    உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.25 ( இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 4 மணி ) மணியளவில் அரசகுடும்பத்தார் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வர தொடங்கினார்கள். 11.40 மணியளவில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசரும், மணமகனுமான ஹாரி ஆகியோர் தேவாலயம் வந்தடைந்தனர். 11.52 மணியளவில் பிரிட்டன் அரசு இரண்டாம் எலிசபெத் இங்கு வந்து சேர்ந்தார். சரியாக நண்பகல் 12 மணியளவில் மணமகள் மேகன் மார்க்லே காரில் வந்து இறங்கினார்.


    சற்று நேரத்தில் இளவரசர் சார்லஸ் மணமகளின் கையை பற்றியபடி தேவாலயத்திற்குள் அழைத்து சென்றார்.


    பின்னர் இசைக்குழுவினரின் பிரார்த்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர்.


    திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 19-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சாரட் வண்டியை விண்ட்சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து சென்றன.

    சாலைகளின் ஓரம் பிரிட்டன் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

    திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் ஏராளமான போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Royalwedding #PrinceHarry #MeghanMarkle

    Next Story
    ×