search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி வரி குறைப்பு: வீடுகள் விற்பனை 2 மடங்கு உயரும் - ரியல் எஸ்டேட் அதிபர்கள் கருத்து
    X

    ஜிஎஸ்டி வரி குறைப்பு: வீடுகள் விற்பனை 2 மடங்கு உயரும் - ரியல் எஸ்டேட் அதிபர்கள் கருத்து

    கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளதால் வீடுகள் விற்பனை 2 மடங்கும் உயரும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #GST #RealEstate
    சென்னை:

    வீடுகள், வீட்டுமனை விற்பனை செய்யும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் 2 வருடங்களுக்கு முன்பு கொடி கட்டி பறந்தது.

    இந்த நிலையில் புதிதாக கட்டி விற்பனை செய்யும் வீடுகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால் வீடுகளின் விலை 12 சதவீதம் அதிகரித்தது.

    எனவே நடுத்தர மக்கள் வீடு வாங்க முன்வரவில்லை. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் தேக்கம் அடைந்தது. கட்டிய வீடுகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கட்டிட தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

    தற்போது கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரிமியர் ஹவுசிங் அண்ட் பிராப்பர்ட்டிஸ் நிறுவன உரிமையாளர்கள் சிவபிரகாஷ், சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:-

    5 வருடங்களுக்கு முன்பு வீடுகளை கட்டும் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. எனவே இதில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். இதனால் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகமானது. நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்குவது அதிகரித்தது.

    அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு வீடு விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீடுகள் விற்பனை ஆகாததால் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இப்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மீண்டும் ஒளி மயமான எதிர்காலத்தை காட்டி இருக்கிறது. சொந்த வீடு வாங்கும் கனவில் இருந்த மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கு முன்பு புதிய வீடு வாங்க விரும்பிய மக்கள் மனதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இனி நடுத்தர மக்களிடம் வீடு வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு விற்பனை இரண்டு மடங்காக உயர வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே கட்டி விற்பனையாகாத வீடுகள்- விற்கத் தொடங்கும் போது ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வந்த தேக்கம் முடிவுக்கு வரும். கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சிமெண்ட், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் விற்பனை அதிகமாகும்.

    பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கு ரூ.2.67 லட்சம் சலுகை வழங்கப்பட்டது. தற்போது ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.

    இதனால், நடுத்தர மக்கள் அதிக அளவில் வீடுகள் வாங்க வாய்ப்பு ஏற்படும். பொறியியல் படித்த மாணவர்களுக்கும் இனி வேலை வாய்ப்பு உருவாகும். இந்த வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம். எனவே கட்டிட தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். பொருளதாரம் உயரும். 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட செலவுகள் குறைக்கப்பட்டு ஜி.எஸ்.டி.யிலேயே அடங்கி விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சென்னையில் சுமார் 50 ஆயிரம் புதிய வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளதால் இந்த வீடுகள் அனைத்தும் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.

    மொத்தத்தில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அறிவிப்பாக இது உள்ளது என்று பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #GST #RealEstate
    Next Story
    ×