search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்
    X

    திருச்சி அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்

    திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்- ருக்மணி தம்பதியினர். இவர்களது மகள் பார்வதி (வயது 24). பார்வதிக்கும், திருச்சி காஜாமலை இந்திராநகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற மணிகண்டன் (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீதர், சுதா என மகன், மகள் உள்ளனர்.

    கார் டிரைவரான ராஜ்குமார் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் திருச்சிக்கு திரும்பினார். திருச்சியில் கார் டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் ராஜ்குமாருக்கு மனைவி பார்வதி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் பார்வதியை உப்பிலியாபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டார். மகன், மகளுடன் ராஜ்குமார் திருச்சி காஜாமலை இந்திராநகரில் வசித்து வந்தார். நேற்று இரவு ராஜ்குமார் திடீரென மனைவியை பார்க்க உப்பிலியாபுரம் வெள்ளாளப்பட்டிக்கு சென்றார்.

    பார்வதியுடன் இரவில் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்து அறையில் பார்வதியின் தந்தை தங்கவேலும், ருக்மணியும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 10.30 மணிக்கு ராஜ்குமார் பார்வதியுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பிறகு ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக குத்தினார். இதில் பார்வதிக்கு மார்பு, தோள்பட்டை, கழுத்து பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.

    பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பெற்றோர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து தங்கவேல் உப்பிலியபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராஜ்குமாரை இரவு முழுவதும் தேடினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×