search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி சான்றிதழ் பெற்று உயர் மருத்துவ சிகிச்சை அளித்த வேலூர் டாக்டர்
    X

    போலி சான்றிதழ் பெற்று உயர் மருத்துவ சிகிச்சை அளித்த வேலூர் டாக்டர்

    வேலூரில் மேற்படிப்பு படிக்காமல் ரூ.6 லட்சம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்று உயர் மருத்துவ சிகிச்சை அளித்துவந்த டாக்டரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #FakeCertificate
    வேலூர்:

    வேலூரில் டாக்டர் சங்கர் அறுவை சிகிச்சை நிபுணர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். முறைப்படி படித்து இருந்தார்.

    அதன்பிறகு சர்ஜரி (அறுவை சிகிச்சை) உயர்படிப்பு படித்திருந்ததாக பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் உயர்படிப்பு படிக்கவில்லை என தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் வந்தது.



    இதையடுத்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது உயர் படிப்பு சான்றிதழை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் அந்த சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. எம்.பி.பி.எஸ். மட்டுமே முடித்திருந்த அவர் சிசெல்லஸ் நாட்டில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் என்ற மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர் கல்வி பயன்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

    இது எப்படி கிடைத்தது என்று அவரிடம் விசாரித்தபோது புனேயில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் கொடுத்து சான்றிதழை பெற்றதாக அவர் தெரிவித்தார். அவருக்கு சான்றிதழ் கொடுப்பதற்காக அந்த நிறுவனம் தேர்வு ஒன்றையும் நடத்தி உள்ளது. அன்றே தேர்வு எழுதி அன்று மாலையே சான்றிதழையும் கொடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சான்றிதழை வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறினார்.

    அவர் தனது கிளினிக் அறிவிப்பு பலகையிலும் மற்ற வகையிலும் அறுவை சிகிச்சை நிபுணர் என்று குறிப்பிடக்கூடாது எனவும், அதுபோன்ற சிகிச்சை அளிக்க கூடாது என்று உத்தரவிட்டதாகவும் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் இதேபோல போலி சான்றிதழ் பெற்று டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இதேபோல 21 டாக்டர்கள் போலி சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்து வருவதை மராட்டிய மருத்துவ கவுன்சில் கண்டு பிடித்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் இதுபோல போலி சான்றிதழ் மூலம் சிகிச்சை அளித்து சிக்கியது இதுதான் முதல்முறை என்று டாக்டர் செந்தில் கூறினார். தொடர்ந்து வேறு யாராவது போலி சான்றிதழ் பெற்றிருக்கிறார்களா? என ஆய்வு நடப்பதாகவும் தெரிவித்தார்.

    சில டாக்டர்கள் உயர் மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்றுவிட்டு அந்த படிப்பை படித்தது போல குறிப்புகளை போட்டுக் கொள்கிறார்கள். இது தவறானது என்றும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறினார்கள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு சில டாக்டர்கள் நீரிழிவு, தோல்நோய், அழகு சிகிச்சை நிபுணர் போன்ற வேறு படிப்புகளை படித்தது போல போலியாக குறிப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மருத்துவ கவுன்சில் விதிகள்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் செந்தில் கூறினார்.

    உரிய படிப்புகள் படிக்காமல் இதுபோன்று சிகிச்சைகள் அளிப்பது மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று மருத்துவ நிபுணர் ஜார்ஜ் தாமஸ் கூறினார். #FakeCertificate
    Next Story
    ×