search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கர்நாடக- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தில் மழைக்குறைவு காரணமாக தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த அளவே வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்திக்கல் பாறையில் இருந்து பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் அந்த பகுதிகளில் பரிசல் இயக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.

    வழக்கமான பாதையான பரிசல் நிலையத்தில் இருந்து பரிசல்களை இயக்க இன்று அல்லது நாளை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மெயினருவில் தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி இன்னும் நடைபெறாததால் அங்கு தொடர்ந்து 52-வது நாளாக இன்றும் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மெயினருவியை தவிர மற்ற பகுதிகளான முதலை பண்ணை, காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிள் எண்ணை மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery


    Next Story
    ×