search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை கடத்த முயன்றதாக பீகார் வாலிபர் மீது தாக்குதல்- 2 கி.மீட்டர் ஓட, ஓட விரட்டி அடித்தனர்
    X

    சிறுமியை கடத்த முயன்றதாக பீகார் வாலிபர் மீது தாக்குதல்- 2 கி.மீட்டர் ஓட, ஓட விரட்டி அடித்தனர்

    திருவள்ளூர் அருகே சிறுமியை கடத்த முயன்ற பீகார் வாலிபரை அப்பகுதி மக்கள் 2 கி.மீட்டர் தூரம் ஓட, ஓட விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் குழந்தைகளை கடத்த வடமாநில கும்பல் முகாமிட்டு இருப்பதாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் செய்தி பரவியது. இதனால் பல்வேறு இடங்களில் வடமாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    உச்சகட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி அம்மாள் என்பவர் பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இதே போல் பழவேற்காட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரை கிராம மக்கள் அடித்து கொலை செய்து பாலத்தில் தூக்கில் தொங்க விட்ட கொடூரமும் நடந்தது.

    இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். வட மாநில வாலிபர்கள் குறித்த வதந்தி பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் பின்னர் குழந்தை கடத்தல் பீதி தமிழகத்தில் குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் திருவள்ளுர் அருகே சிறுமியை கடத்த முயன்றதாக பீகார் வாலிபரை பொது மக்கள் தாக்கிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள அரசு பள்ளி அருகே நேற்று மாலை சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் சிறுமிகளிடம் பேச்சு கொடுத்தார்.

    திடீரென அவர் ஒரு சிறுமியை தாக்கினார். இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டாள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். வாலிபர் சிறுமியை கடத்த வந்திருப்பதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.அடி தாங்க முடியாத வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனாலும் விரட்டிச் சென்ற வாலிபர்கள் சுமார் 2 கி.மீட்டர் தூரம் துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கினர்.

    போளிவாக்கம் அருகே அந்த வாலிபர் ரத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மணவாள நகர் போலீசார் விரைந்து வந்து வடமாநில வாலிபரை மீட்டனர். பின்னர் அவருக்கு முதல் உதவி கிசிச்சை அளித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் சவுத்ரி (30) என்பது தெரிந்தது. மனநிலை பாதிக்கப்பட்டது போன்று மாறி, மாறி பேசினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவத்தால் திருவள்ளூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதே போல் பூண்டி புன்னப்பாக்கம், எறையூர், மணவாளநகர், கொசவன் பாளையம் பகுதியிலும் இதே போல் கடந்த 2 மாதத்துக்கு முன்பு குழந்தை கடத்தல் பீதியில் வடமாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி போலீசார் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை கடத்தல் பீதியில் வடமாநில வாலிபர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
    Next Story
    ×