search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்களா?- ரவி சாஸ்திரி பதில்
    X

    ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்களா?- ரவி சாஸ்திரி பதில்

    உலகக்கோப்பையை கணக்கில் கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் வேலைப்பளு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து உடனான தொடர் வருகிற 10-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதன்பின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு டி20, மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் மார்ச் 23-ந்தேதி ஐபிஎல் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் மே இரண்டாவது வாரம் வரை நடைபெறுகிறது. அதன்பின் மே 30-ந்தேதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இதனால் இந்தியா அடுத்த மூன்று மாதங்கள் அதிக அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். அதன்படி ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். முன்னணி வீரர்கள் 14 போட்டிகளிலும் இடம்பெற்றால், அது உலகக்கோப்பை தொடரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை உள்ளது.



    இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே, வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகம் ஓய்வு அளிக்க வேண்டும் என்றார். குறிப்பாக பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களின் வேலைப்பளு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இதுவரை இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் ரிதம் சிறப்பாக உள்ளது. ஐபிஎல் தொடரின்போது, அணி உரிமையாளர்களிடமும், கேப்டன்களிடமும் வீரர்களின் வேலைப்பளு குறித்து பேச முயற்சி செய்வோம்.

    அவர்களுடைய உடற்தகுதி மற்றும் ஃபார்ம் பாதிப்பு அடையாத வகையில் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடுவதை உறுதி செய்ய முயற்சி செய்வோம். அவர்களுக்கு சரியான ஓய்வு அளிக்கப்படுவதற்கான வழிகளைத் தேடுகிறோம். அப்படி செய்தால் அவர்களால் உலகக்கோப்பைக்கு சரியான வகையில் தயாராக முடியும்.



    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் 10 நாட்கள் இடைவெளி உள்ளதால், வீரர்களின் வேலை மற்றும் மதிப்பீட்டில் எங்களால் அக்கறை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், ஐபிஎல் தொடரின்போது உடற்தகுதி மற்றும் அவர்களுடைய திறமை மீது வீரர்கள் கவனம் செலுத்துவது முக்கியமானது’’ என்றார்.
    Next Story
    ×