search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி
    X

    பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி

    பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். #PulwamaAttack #RajnathSingh #PakistanISI
    ஸ்ரீநகர்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    இறுதி மரியாதைக்கு பிறகு ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.

    புல்வாமா தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், காஷ்மீர் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


    ’பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் பயங்கரவாதிகளுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சில (பிரிவினைவாத) அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து பணம்பெற்று வருகிறார்கள்.

    அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சதிவேலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவர்கள் திட்டமிட்டு தருகின்றனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்.

    இவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்க்கமான போரில் இந்தியா வெற்றிபெற்றே தீரும்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக இனி சில நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் சாலைகளில் வேறெந்த தனியார் வாகனங்களும் இடையில் செல்ல முடியாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நமது வீரர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையால் ஏற்படும் அசவுகரியத்துக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்’ எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  #PulwamaAttack #RajnathSingh #PakistanISI      
    Next Story
    ×