search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீன்மூர்த்தி பவனில் இருந்து நேரு அறக்கட்டளை வெளியேற உத்தரவு - மத்திய அரசு
    X

    தீன்மூர்த்தி பவனில் இருந்து நேரு அறக்கட்டளை வெளியேற உத்தரவு - மத்திய அரசு

    தீன்மூர்த்தி பவனில் இருந்து சோனியா தலைமையில் செயல்படும் நேரு அறக்கட்டளை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #TeenMurtiBhavan #Congress

    புதுடெல்லி:

    ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது டெல்லியில் உள்ள அரசு மாளிகையான தீன்மூர்த்தி பவனில் வசித்து வந்தார்.

    அவரது மறைவுக்கு பிறகு அந்த இல்லம் நேரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அங்கு பெரிய அளவில் நூலகமும் செயல்பட்டு வருகிறது.

    நேரு மரணம அடைந் ததையடுத்து அவரது பெயரில் நேரு நினைவு நிதியம் என்ற பெயரில் 1964-ல் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது.

    இந்த அறக்கட்டளையின் அலுவலகமும் தீன்மூர்த்தி பவனில்தான் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக கரன்சிங்கும் இருந்து வருகின்றனர்.

    அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு படிப்பு உதவி, ஆய்வு மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

    மேலும் ஆண்டு தோறும் நேரு பிறந்தநாளில் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

    சமீபத்தில் தீன்மூர்த்தி பவனை அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகமாக மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது, நேரு அருங்காட்சியகமாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    தீன்மூர்த்தி பவன் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    இந்த நிலையில் தீன்மூர்த்தி பவனில் செயல்படும் நேரு நினைவு நிதிய அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்யும் படி வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அறக்கட்டளைக்கு கடந்த 11-ந் தேதி நோட்டீசு அனுப்பப்பட்டது. செப்டம்பர் 24-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


    நேற்று 24-ந் தேதி ஆகும். இதுவரை அறக்கட்டளை அங்கிருந்து காலி செய்யப்படவில்லை.

    காலி செய்யும்படி வந்த உத்தரவுக்கு அறக்கட்டளையின் செயலாளர் சுமான் துபே கடந்த 20-ந் தேதி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது சம்பந்தமாக அறக்கட்டளையின் துணைத் தலைவர் கரன்சிங் கூறியதாவது:-

    மத்திய அரசு இப்படி ஒரு நோட்டீசை அனுப்பி இருப்பது அறக்கட்டளையை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த அறக்கட்டளையின் நிதியில் இருந்துதான் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

    மேலும் இதன் நிதியை அவற்றை பராமரிப்பதற்கும் வழங்கி வருகிறோம். தற்போது இந்த அருங்காட்சியகத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார்கள்.

    அறக்கட்டளையை காத்துக்குக்கொள்ளும் வகையில் நாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம். மேலும் 1964-ல் இருந்து வாடகை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    அருங்காட்சியகத்துக்கும், எங்களுக்கும் எந்த உறவும் இல்லாதது போல் இந்த நடவடிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி அருங்காட்சியக டைரக்டர் சக்தி சின்கா கூறும் போது, நேரு நினைவு நிதியம் அதிகாரப்பூர்வம் அற்ற முறையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இங்குள்ள நூலகத்துக்கு அதிக மக்கள் வரும் நிலையில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த இடத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

    எனவே, இங்குள்ள நிர்வாக அலுவலகம், நூலகத்துக்கு சம்பந்தம் இல்லாத அலுவலகங்கள் ஆகியவற்றை வெளியேற்றுகிறோம். ஏற்கனவே உள்ள கட்டிடத்தை விரிவுபடுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×