search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5000 ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
    X

    5000 ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி

    5000 ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
    புது டெல்லி:

    கடந்த மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மேலும் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

    இதுபற்றி ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் "பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இனி நாள் ஒன்றுக்கு தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை டெபாசிட் செய்யலாம்.

    அது குறித்து எந்த கேள்வியும் வங்கியால் கேட்கப்படமாட்டாது. அறிவிக்கப்பட்டு உள்ள காலக்கெடுவான டிசம்பர் 30-ந் தேதிக்குள் இதுபோல் பணத்தை செலுத்தலாம். இந்த தொகை அதுவரை வரவில் மட்டுமே வைக்கப்படும்.

    அதே நேரம், ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாடிக்கையாளர் தனது கணக்கில் இனி டெபாசிட் செய்தால் டிசம்பர் 30-ந் தேதிக்குள் அவரால் ஒரே ஒரு முறை மட்டுமே இதுபோல் பணத்தை செலுத்த முடியும்.

    தவிர, ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்யும்போது அந்த பணத்தை அதுவரை மாற்றிக்கொள்ளாததற்கு உரிய காரணத்தையும் வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.

    அந்த காரணத்தை வங்கி அதிகாரிகள் இருவர், வாடிக்கையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்வார்கள். பின்வரும் காலங்களில் தணிக்கை பரிசோதனைக்கு இந்த விளக்கம் உதவுவதாக அமையும்.

    ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகைக்கு பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது, டிசம்பர் 30-ந் தேதி வரை அதுபோல் அடுத்தடுத்து டெபாசிட் செய்யும் பணத்துடன் அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்த்து கணக்கிடப்படும்.

    இதில் பழைய ரூபாய் நோட்டுகளாக செலுத்திய மொத்த தொகை ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருந்தால், அது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்த தொகையாக கணக்கிடப்படும்.

    அதேபோல் 3-ம் நபர் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது அது 3-வது நபரின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். இப்படி பணம் டெபாசிட் செய்யும்போது 3-வது நபரும் உடன் இருக்கவேண்டும்.

    பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பட்டியலிடப்பட்ட 29 வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்" என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் 5000-க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில் "கே.ஒய்.சி விதிகளை பூர்த்தி செய்தவர்கள் ரூ 5000-க்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளது
    Next Story
    ×