search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் மீண்டும் ஏலம்
    X

    விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் மீண்டும் ஏலம்

    பிரபல மதுபான நிறுவன உரிமையாளரும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனருமான விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு விமானம் மீண்டும் ஏலத்தில்விட தீர்மனிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர் ரூ.9,000 கோடி வரை வங்கிகளுக்கு செலுத்த வேண்டி உள்ளது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் விஜய் மல்லையா லண்டனுக்கு விமானத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீது சி.பி.ஐ. மோசடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அமலாக்கப்பிரிவு சார்பில் சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு முன் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் பிடிவாரண்டு பிறப்பித்து டெல்லி ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

    லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா நாடு திரும்ப விரும்புகிறார். ஆனால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இங்குள்ள சட்டம் போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவன அலுவலகம், அவருக்கு சொந்தமான ஆடம்பர பங்களாக்கள் மற்றும் அவர் பயன்படுத்திய சொகுசு விமானங்கள் போன்றவை சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.

    ஆனால், இவற்றை வாங்க விரும்பும் நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏலத்தொகை சந்தை விலையை மிக அதிகமாக இருந்ததால், இவற்றை விற்பனை செய்யமுடியாத நிலை நீடித்தது.

    குறிப்பாக, விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சேவை வரித்துறைக்கு ரூ.800 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளதால், அவரது தனிப்பட்ட சொகுசு விமானத்தை 2013-ம் ஆண்டு, சேவை வரித்துறை ஜப்தி செய்து வைத்துள்ளது. அதை ஏல விற்பனை மூலம் விற்று கடனை ஈடுசெய்ய சேவை வரித்துறை முடிவு செய்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி நடந்த ஏலத்தின்போது, அந்த விமானத்துக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.152 கோடி நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஆனால், அந்த விமானத்தை வாங்க பெரிதான அளவில் வரவேற்பு இல்லாமல் போய் விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.1.09 கோடிக்கு ஏலம் கேட்ட பின்னர் வேறுயாரும் கேட்காததா அந்த ஏலம் தோல்வியில் முடிந்தது.

    பின்னர், மறுபடியும் ஆகஸ்ட் மாதம் நடந்த ஏலத்தில் 27 கோடி ரூபாய்வரை ஏலம் கேட்கப்பட்டது. ஆனால், அந்த தொகையை ஏற்றுக்கொள்ள ஏல நிறுவனம் மறுத்து விட்டது. குறைந்தபட்ச தொகையை குறைக்குமாறு கோர்ட் உத்தரவிட்ட நிலையில், அதே விமானத்தை குறைந்தபட்ச விலையை சற்று குறைத்து, வரும் 28 மற்றும் 29 தேதிகளில் ஆன்லைன் மூலம் ஏலம்விட சேவை வரித்துறை தற்போது தீர்மானித்துள்ளது.

    இந்தமுறை ஏலத்துக்கான குறைந்தபட்ச தொகை எவ்வளவு? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட சேவை வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
    Next Story
    ×