search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரியில் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தும் பணி தீவிரம்
    X

    புழல் ஏரியில் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தும் பணி தீவிரம்

    புழல் ஏரியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதற்காக ராட்சத மின்மோட்டார் பொருத்தப்பட்டு குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #Puzhallake
    சென்னை:

    புழல் ஏரியில் தண்ணீர் குறைந்த நிலையில் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் ‘ஜோன்ஸ் டவர்’ பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சுமார் 2 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் வினியோகம் செய்யப்பட்ட பின்னர், ஏரியில் ஆங்காங்கே கிடக்கும் தண்ணீரை சிறிய அளவில் வாய்க்கால் போன்று வெட்டி ஒரே இடத்துக்கு கொண்டு வந்து, மின்மோட்டார்கள் மூலம் குழாய்களில் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக மின்சாரத்தில் இயங்கும் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்தப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அதற்கு பிறகு மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையை கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரி தண்ணீர் மற்றும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் சொற்ப அளவு தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை வெகு நாட்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் மாற்று ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீராணம், நெய்வேலி சுரங்கம், விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் ஏரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் எடுப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கோடை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரியில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், ஏரியை தூர் வாருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் எடுத்து முடித்தவுடன் தூர் வாரும் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #Puzhallake
    Next Story
    ×