search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கூர் அருகே பள்ளி வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி
    X

    மதுக்கூர் அருகே பள்ளி வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி

    மதுக்கூர் அருகே பள்ளி வேன் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அங்கண்ணி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48) எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டில் வேலையை முடித்து விட்டு கீழத்தெரு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுக்கூர் கண்ணன் ஆத்துப்பாலம்- மண்டல ஓடை அருகே அவர் சென்ற போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக சேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனே இது குறித்து மதுக்கூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேகர் விபத்தில் பலியான சம்பவம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. செங்கமலகண்ணன் மற்றும் மதுக்கூர் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன் பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×