search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டன - தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டன - தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரி களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வெறும் ஆயிரத்து 259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும். இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் 2½ மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடியும்.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. இதன் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி, தற்போது 1 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.

    இதனால் மின் மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தண்ணீர் இல்லாததால் ஏரி முழுவதும் மணல் பரப்பாக காணப்படுகிறது. பூண்டி ஏரியில் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த இருப்பு 3231 மில்லியன் கனஅடி). ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 2 மாதத்துக்கு முன்பே சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மார்ச் 26-ந் தேதி முதல் நின்றுவிட்டது. நீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    பேபி கால்வாய் மூலம் 12 கனஅடி தண்ணீர் மட்டும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. ஏரியில் 8 மில்லியன் கனஅடிக்கு நீர்மட்டம் குறைந்ததால் பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்புவதும் சாத்தியப்படாது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 476 மில்லியன் கனஅடி நீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி). 57 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியில் 769 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. (மொத்த கொள்ளளவு 3300). குடிநீர் தேவைக்காக 103 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    தற்போது செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    வீராணம் ஏரி மட்டுமே சென்னை மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கல்குவாரி தண்ணீர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×