search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானாபுரம் கூட்டுரோடு அருகே கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசம்
    X

    வானாபுரம் கூட்டுரோடு அருகே கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசம்

    வானாபுரம் கூட்டுரோடு அருகே கரும்பு பயிர்கள் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    வானாபுரம் கூட்டுரோடு அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன், விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது சொந்தமான நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தார்.

    சம்பவத்தன்று இரவு கடம்பூர் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் கரும்பு தோட்டத்தின் மேலே சென்ற மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசின. அதில் ஏற்பட்ட தீ பொறி கரும்புதோட்டத்தில் விழுந்து தீப்பிடிக்க தொடங்கியது.

    அப்போது பலத்த காற்று வீசியதால் அந்த தீ அருகே இருந்த தேவர்மணி மற்றும் பகவான் ஆகியோர் பயிரிட்டிருந்த கரும்பு தோட்டத்திலும் பரவியது. 3 பேரின் நிலங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்துக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கரும்புதோட்டம் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதமடைந்த கரும்பு பயிர்களின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×