search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன
    X

    பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன

    பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் ‘நீட்’ தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளிக்கூட பாடத்திட்டம் 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவது உண்டு. ஆனால் பல வருடங்களாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு புதிதாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

    ஆனால் அந்த பாடத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கடந்த வருடம் மத்திய அரசு அனைத்து மாநில மாணவர்களும் ‘நீட்’ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் எம்.பி.பி.எஸ். படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது. ஆனால் தமிழகத்துக்கு விதிவிலக்கு கோரி முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

    இந்த வருடம் அதே போல விதிவிலக்கு கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அது அப்படியே கிடப்பில் உள்ளது. அடுத்த மாதம் 7-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் இன்னும் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விதிவிலக்கு உண்டா? இல்லையா? என்று இன்னும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


    ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள், எனவே தமிழகத்தில் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

    இந்நிலையில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாடநூல் விற்பனை நிலையத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இது பற்றி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றார்.

    பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் (2018-2019) மாற்றப்படலாம். வழக்கமாக பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்திய மறுவருடம்தான் பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். எனவே 2019-2020 கல்வி ஆண்டுதான் பிளஸ்-2 புதிய பாடதிட்டம் வரும் என தெரிகிறது.

    இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கூறுகையில், அடுத்த வருடம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடக்கிறது. எனவே ‘நீட்’, என்ஜினீயரிங் நுழைவு தேர்வை எழுத தகுதி வாய்ந்த பாடத்திட்டம் தேவை. தற்போதைய பாடத்திட்டம் நீட் தேர்வை சமாளிக்கும் வகையில் இல்லை. எனவே கண்டிப்பாக பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுத இலவசமாக பயிற்சி மையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 
    Next Story
    ×