search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பக்கவாதத்தால் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள்
    X

    பக்கவாதத்தால் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள்

    பக்கவாதம் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு உடல் ரீதியாக வேறுசில பிரச்சினைகளும் தோன்றலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பக்கவாதம் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு உடல் ரீதியாக வேறுசில பிரச்சினைகளும் தோன்றலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    வலிப்பு

    பக்கவாதம் தாக்கியபின் நோயாளிகளுக்கு வலிப்பு வரக்கூடும். சிலருக்கு 24 மணிநேரத்திற்குள்ளாகவே வரலாம். அடிக்கடி வரும் வாய்ப்பும், அதிகம் வலிப்பு வரும் வாய்ப்பு, நோயாளிகளுக்கு உண்டு என்பதை குடும்பத்தினர் புரிந்து செயல்பட வேண்டும்.

    நோய்த்தொற்று

    பக்கவாதம் ஏற்பட்ட 48 மணிநேரத்தில் ஏற்படும் இறப் புக்கு முக்கிய காரணம் தொற்றினால் ஏற்படும் நிமோனியா தான். அதனால் நோய்தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம்.

    தசை, எலும்பு பிரச்சினைகள்


    டாக்டரின் தலைமையில் விவாதித்து, நோயாளியை எவ்வாறு கையாள்வது என்று அறிய வேண்டும். நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளியை எங்கு பிடித்து தூக்குவது, எந்த நிலையில் உட்கார வைப்பது போன்றவையும் தீர்மானிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனமாக கையாள வேண்டும். படுக்கையில் நோயாளியை திருப்பி விடும்போதும், இன்னொரு இருக்கைக்கு மாற்றும் போதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    தோல் கிழிதல்

    உணர்ச்சியின்மை காரணமாகவும், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும் தோல் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் படுக்கையில் ஒரே நிலையில் இருப்பதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக புண்கள் உண்டாகும் இதை சமாளிக்க உடலில் அழுத்த ஏற்படும் குறிப்பிட்ட இடங்களை அவ்வப்போது நீவி விட வேண்டும். சருமத்தை சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் பார்த்து கொள்வது முக்கியம்.

    தோலை பாதிக்காத வகையில் உடலுக்கு இதமான படுக்கைகள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும். படுத்த நிலையில் திருப்பி விடும்போது கவனமாக, அதிக உராய்வு, அதிக அழுத்தம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    விழுந்து காயம் படுதல்


    ஓரளவு நகரும் நிலை வந்தபின், பிறரை தொந்தரவு செய்ய விரும்பாமல், நோயாளியே, தன்னிச்சையாக நகர முற்படலாம். அப்போது தடுமாறி கீழே விழுந்து அடிபட வாய்ப்பு அதிகம். அவ்வாறு விழுந்து அடிபட்டு, காயமடைந்த போதிலும், உறுப்புகளின் உணர்ச்சியின்மை காரணமாக அதை உடனடியாக உணரமாட்டார்கள். பேச்சு ஒழுங்கற்று இருப்பதும், தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே தீவிர கண்காணிப்பு தேவை.

    பதற்றம்

    ஏற்கனவே மனச்சோர்வுக்கு ஆளானவர்கள், மொழி பிரச்சினை உள்ளவர்கள், உடல் இயக்க பிரச்சினை அதிகம் உள்ளவர்கள், சமூகத்தில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு பதட்டம் கீழ் மனநிலை பெறும் வாய்ப்பு அதிகம்.

    மாய உருவத்தோற்றம்


    பக்கவாதம் வந்தவர்களில் சிலர் தாங்களாகவே தன்னை போலவே ஓர் உருவத்தை கற்பனை செய்து கொண்டு, அவ்வப்போது அதனுடன் பேசுவது, சிரிப்பது என கற்பனை செய்து கொண்டு யாரோ வந்து போனதாக குடும்பத்தினரிடம் சொல்லி குழப்புவார்கள். இந்த மாய உருவத்தோற்றம் பார்க்கின்ஸன்ஸ் நோய் உள்ளிட்ட வேறுசில நோய்களிலும் ஏற்படும்.

    ரோட்டில் நடந்து போகும்போது, அடுத்து எங்கு திரும்ப வேண்டும் என்று மறந்துபோகும். சேர வேண்டிய இடம், திசை மறந்து போகும். இது அலசீமர் நோயின் அறிகுறி ஆகும். பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அழுவார்கள், சம்பந்தமில்லாமல் சிரிப்பார்கள். சில சமயம் அதை உணர்ந்து செய்வார்கள். சில சமயம் உணர மாட்டார்கள். குடும்பத்தார் இதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்வது நல்லது. திடீர் விபத்து மற்றும் இழப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பு.

    மன அழுத்தம்

    படுக்கையில் அதிக நேரம் இருப்பது, பிறரை சார்ந்திருப்பது, சமூகத்தில் பழக முடியாதது, வலி, பொருளாதார பிரச்சினை, பிறரின் ஏளனத்துக்கு ஆளாதல் என பல காரணங்களால் ஏற்படும் வருத்தம், சோர்வு எல்லாம் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இதற்கு நல்ல உளவியல் நிபுணரின் ஆலோசனை அவசியம். பார்க்கின்ஸன்ஸ், அல்சீமர் நோயாளிகளிடமும் மன அழுத்தம் இருக்கும்.

    பேரார்வம், வெறி

    ஏதாவது பொருட்களை தொடர்ந்து சேகரிப்பது, சில குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது, ஒரே விஷயத்தை அடிக்கடி பேசுவது, பார்ப்பது என பல நிலைகள் காணப்படும். இது அல்சீமர் நோயாளிகளிடமும் இருக்கும். மேற்கண்ட அத்தனை உணர்வுகளும், இனிவரும் பல்வேறு நோய் நிலைபாடுகளிலும் தோன்றி, அவர்தான் இவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். அவை

    ரத்தத்தில் சர்க்கரை குறைவது

    சர்க்கரை அளவு குறையும்போது, மூளைக்கு தேவையான க்ளுகோஸ் அளவு குறைகிறது. இதனால் உடலுறுப்புகளை இயக்க முடியாத நிலை ஏற்படலாம். மயக்கம், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம், கை, கால் இயக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். பக்கவாத நோய் போல அதே அறிகுறிகள் தோன்றும்.

    வலிப்பு வந்து நின்ற பின் முதல் அரை மணி நேரத்தில் மயக்கம், தலைவலி, வயிறு பிரட்டல், குழப்பம், ஞாபகமின்மை ஆகியவை இருக்கும் பெரும்பாலான அறிகுறிகள் பக்கவாதத்தின் அறிகுறிகளை ஒத்திருக்கும். சிலவகை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது பக்க விளைவாக மேற்கூறிய அறிகுறிகள் தோன்றலாம். அவை, பக்கவாதம் வந்து விட்டதோ என்ற பயத்தை தோற்றுவிக்கலாம்.

    தலைக்காயம்

    விபத்தில், கபாலத்தில் காயம் ஏற்படாவிட்டாலும், மூளை கலக்கத்துக்கு உள்ளாகலாம். இதனாலும் மயக்கம், முகத்தசை இழுப்பு, குழப்பம், பேச்சு குழறுதல், நினைவிழப்பு ஆகியன தோன்றி பக்கவாதமோ என்று அஞ்சத்தோன்றும்.

    மூளை வீக்கம்

    பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் மூளை பாதிக்கப்பட்டு வீக்கம் அடைதல் காரணமாக உடல் இயக்கம் மற்றும் நினைவாற்றலில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஊட்டசத்தின்மை, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைதல், வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகியவற்றாலும் இப்பிரச்சினை வரலாம்.

    ரத்தத்தில் உப்பு குறைதல்

    இதன் காரணமாக மூளையில் வீக்கம் ஏற்பட்டு உடல் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி, வயிறு பிரட்டல் ஆகியன ஏற்பட்டு பாதிப்பு அதிகமானால் கோமா கூட நேரும்.

    மூளையை சுற்றி உள்ள மூன்றடுக்கு உறையில் சீழ்த்தேக்கம் ஏற்படலாம். ரத்தம் சீராக இல்லாமல் சிறு கட்டிகளாக தேங்கி அடைப்பை ஏற்படுத்தலாம். அப்போது பக்கவாதத்துக்கு ஏற்படும் அறிகுறிகள் தோன்றலாம். ஹெர்பீஸ் என்ற வைரஸ், மூளையை தாக்கும்போதும் நினைவிழப்பு, உடல் மற்றும் மூளை இயக்கத்திறன் இயக்கங்களில் மாறுதல் ஏற்படும்.

    ஒற்றைத்தலைவலி


    மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி பெண்களை தாக்கும். சிலருக்கு அத்துடன் வயிற்று பிரட்டல், வாந்தி, பார்வை கோளாறு, பேச்சு குழறல் ஆகியன ஏற்பட்டு பக்கவாத அறிகுறிகளோ என்று தோறும்.ஆகவே வந்திருக்கும் நோய் பக்கவாதம் தானா என்று உறுதி செய்வது முதலில் மிகவும் அவசியம்.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)

    Next Story
    ×