search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளியுடன் கூடிய இருமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் முத்திரை
    X

    சளியுடன் கூடிய இருமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் முத்திரை

    தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு லிங்க முத்திரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.

    விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும். சப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

    பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

    ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

    அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். பெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.



    பலன்கள்

    பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.

    ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும். ஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.

    காய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.

    தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.
    Next Story
    ×