search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்
    X

    அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற இதோ சில ஆலோசனைகளை விரிவாக கீழே பார்க்கலாம்.
    பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற இதோ சில ஆலோசனைகளை காண்போம்:-

    * தேர்வுக்குரிய பாடத் திட்டங்களை முழுவதுமாக தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

    * ஒவ்வொரு பாடத்திற்குரிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடம், தலைப்புகளை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

    * தேர்வெழுத தேவையான பாடப்புத்தகங்கள், வகுப்பில் எழுதிய பாட குறிப்புகள், முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், சிறந்த அகராதி, ஏற்கனவே எழுதிய வகுப்புத் தேர்வில் கேள்வித்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் ஆகியவற்றை தேர்வு எழுதுவதற்கு முன்பே சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது.

    * சில மாணவர்கள் தேர்வு அறிவித்த பின்புதான் வகுப்பில் எழுதிய பாட நோட்டை தேடி அழைவார்கள். இன்னும் சில மாணவர்கள் நூலகம் பக்கம் போய் புத்தகத்தை புரட்டி ஜெராக்ஸ் எடுக்க முயற்சி செய்வார்கள். வேறு சிலர் இரவல் புத்தகம் தேடி இங்கும், அங்கும் அழைவார்கள். இப்படி தேர்வு நேரத்தில் முறைப்படி படிப்பதற்கு பதிலாக முறையற்ற அனைத்தும் வீண் வேலைதானே.

    * தேர்வு காலத்தில் நன்றாக படிக்கின்ற மாணவர்கள் சிறிய படிப்பு குழு (ஸ்டெடி குரூப்) ஒன்றை அமைத்து ஒருவருக்கொருவர் படித்த பாடங்களை பற்றி கலந்துரையாடி படிப்பில் தெளிவு பெற முயற்சி செய்யலாம். படிப்புக் குழு அமைத்து தேர்வுக்கு படிப்பதே மிகவும் மகிழ்ச்சி தரும் செயலாக அமையும்.

    * பாடங்களின் சந்தேகங்களை வகுப்பு ஆசிரியரிடம் நேரில் சென்று நீக்கிக்கொள்வது நல்லது. ஆசிரியர்களை சந்திப்பதற்கு தயக்கம் காட்டினால் முடிவில் சந்தேகங்கள் தீர்க்கப்படாமலேயே தீர்ந்து விடும் என்பதை உணர்ந்து சந்தேகங்களை தீர்ப்பது நல்லது.

    * தேர்வு காலங்களில் ஒவ்வொரு தலைப்பிலுள்ள முக்கியமான பாட கருத்துக்களையும், முக்கியமான குறிப்புகளையும், பாடத்தலைப்புகளையும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

    * பாடத்தோடு இடம் பெற்றுள்ள படங்கள் வரையறை தெளிவாக தனியாக ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. அந்த குறிப்பேட்டை பெரும் பாலான நேரங்களில் கையில் வைத்துக் கொண்டு படிக்கலாம்.



    * திரும்பத்திரும்ப நினைவூட்ட முயற்சி செய்வதன் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு நேரத்தில் எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம்.

    * வகுப்பில் ஆசிரியர்கள் முக்கியமான பாடம் என்றும், வரைபடம் என்றும் குறிப்பிட்ட வற்றை மீண்டும், மீண்டும் படிப்பது நல்லது.

    * தேர்வு தேதி அறிவித்த துமே தேர்வு தொடங்க இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல கால அட்டவணை ஒன்றை தயார் செய்துக் கொள்வது நல்லது.

    * தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனாக்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பேனாவிலும் மை முழுவதும் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். அவசரத் தேவைக்கு உதவும் வகையில் மேலும் ஒரு பேனாவை வைத்துக்கொள்ள வேண்டும். பேனாவோடு, பென்சில், ரப்பர், அளவுகோல் ஆகியவற்றையும் சிறிய பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது.

    * குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி முடிப்பதற்கு வசதியாக கைக்கடிகாரத்தை தேர்வு நேரத்தில் உபயோகப்படுத்துவது நல்லது.

    * தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் எந்த தேதியில் எந்த தேர்வு நடைபெற இருக்கிறது என்பதையும், எந்த நேரத்தில் அந்த தேர்வு நடக்க உள்ளது என்பதையும் குறித்து வைத்துக்கொள்வது சிறந்தது.

    * தேர்வுக்கு முந்தையநாள் படித்த பாடங்களை திரும்பவும் படிப்பது நல்லது. சில மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் படித்துவிட்டு, பின்னர் தேர்வு அறையில் தூக்கக் கலக்கத்துடன் போய் உட்கார்ந்து தேர்வை எழுத முடியாமல் தவித்த துன்பமும் உண்டு.

    * தேர்வு எழுதும் நாளில் அடையாள அட்டையை எடுத்து செல்ல மறக்கக் கூடாது.

    * தேர்வு நேரத்தில் கேள்வித்தாளை பெற்றவுடன் அந்த கேள்வித்தாள் தனக்குரியது தானா? என்பதை ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் சரி பார்த்து கொள்வது அவசியமாகும்.

    * தேர்வுத்தாளில் அனைத்து கேள்விகளும் முறைப்படி அச்சடித்துள்ளனவா? என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * மொத்தத்தில் தேர்வு எழுதும்போது சரியான நேரத்திற்குள் சரியான பதில்களை சரியான விதத்தில் எழுதுவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெறலாம்.
    Next Story
    ×