search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது
    X

    சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது

    அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அம்பை சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. விழா தொடர்ந்து 27-ந் தேதி வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு அம்பாள் வீதி உலா, 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.

    26-ந் தேதி (வியாழக்கிழமை) 9 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா, 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×